கூட்டுப்பாதுகாப்பு

கூட்டுப்பாதுகாப்பு என்ற எண்ணக்கரு சர்வதேச அரசியலில் “பேரம் பேசும் திறன்” என்பதற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். ஒரு தேசம் அல்லது அரசு நீண்ட காலத்திற்குத் தனித்துச் செயற்படுவது அதனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாது. பாதுகாப்பு என்பது ஒவ்வொரு அரசினதும் முதல் தேவையாகவே உள்ளது. பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த ஆயுதங்களைப் பயன்படுத்துதல், அதிகாரத்தினைத் தீர்மானிக்கக் கூடிய ஏனைய மூல வளங்களை உச்சப்படுத்துதல், அதிகாரச்சமனிலையினை எப்போதும் தனக்குச் சாதகமாக வைத்திருக்க முயற்சித்தல் போன்ற செயற்பாடுகளை அரசுகள் கையாளுகின்றன. ஆயினும், அரசுகள் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திக் கொள்ள கூட்டுப்பாதுகாப்பினைத் தமக்கிடையில் ஏற்படுத்தித் தம்மைப் பாதுகாக்கவும் முயலுகின்றன. லஸ்கி (Laski) இதனை வலியுறுத்தவே “சம உரிமையுடன் தேசியவாதத்தினை வளர்ப்பது ஏற்ற பரிகாரமாக அமையும்” எனக் கூறுகின்றார். நடைமுறையில் இத்தத்துவத்தினை அரசுகள் ஏற்றுக் கொள்ளவே முயலுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட அரசுகள் ஒன்றாகச் சேர்ந்து பொதுவான சர்வதேச அமைப்புக்களை உருவாக்குகின்றன. இச்சர்வதேச அமைப்புக்களின் மூலம் யதார்த்தபூர்வமான உலக அரசாங்கத்தினை உருவாக்கிச் சர்வதேசப் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தச் சர்வதேச அரசுகள் முயலுகின்றன. கூட்டுப்பாதுகாப்பு என்ற எண்ணப்பாட்டிற்குள் கற்பனை ரீதியான கூட்டுப்பாதுகாப்பு,யதார்த்தபூர்வமான கூட்டுப்பாதுகாப்பு என்ற இரு வடிவங்களை அடையாளம் காண முடியும் எனவும் கூறப்படுகின்றது.

கற்பனை ரீதியான கூட்டுப்பாதுகாப்பு என்பதைப் பின்வருமாறு விளக்க முடியும். A என்ற அரசு B என்ற அரசினை ஆக்கிரமித்து அல்லது ஆக்கிரமிக்கப் போவதாகக் கூறிப் பயமுறுத்த முற்பட்டால் C,D,E,F,G,H,I,J,K என்ற அரசுகள் B என்ற அரசுடன் கூட்டுச்சேரலாம். B என்ற அரசுடன் C,D,E,F,G,H,I,J,K என்ற அரசுகள் கூட்டுச் சேர்வதன் மூலம் இங்கு கூட்டுப்பாதுகாப்பு என்பது உயிரோட்டம் பெறுகின்றது. இதனை வரைபடம் மூலம் பின்வருமாறு விளக்கலாம்.

clip_image002

யதார்த்த பூர்வமான கூட்டுப்பாதுகாப்பு நிலைப்பாடு என்பது இவ்வாறானதாக அமைய முடியாது அது பின்வருமாறு அமைந்திருக்கும். A என்ற அரசு B என்ற அரசினைத் தாக்கினால் C,D,E,F என்ற அரசுகள் கூட்டுச் சேர்ந்து B என்ற அரசிற்கு உதவி செய்ய முன்வரலாம். அதே நேரத்தில் G,H என்ற அரசுகள் இதிலிருந்து ஒதுங்கிப் பார்வையாளராக இருக்க முனையலாம். I,J,K என்ற அரசுகள் A என்ற அரசினுடைய ஆக்கிரமிப்பினை ஆதரிக்க முற்படலாம். இது கூட்டுப் பாதுகாப்பின் யதார்த்த பூர்வமான நிலைப்பாடாகும். இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் விளக்கலாம்.

 

clip_image004

கூட்டுப்பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டுமாயின் சில விடயங்களைத் தேசிய அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய நலனை முதன்மைப்படுத்தாது விடுதல், ஆக்கிரமிப்பு உணர்வுகளையும் அதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்காது விடுதல், அரச தலைவர்கள் சர்வதேச இறைமை அதிகாரத்தினை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணாது விடுதல். போன்றவைகள் கவனத்தில் எடுக்கப்படாது விடுதல் வேண்டும். இவைகள் கருத்தில் எடுக்கப்படுமாயின் கூட்டுப்பாதுகாப்பு என்பதனை சர்வதேச சமூகம் எற்படுத்தி விட முடியாது. கூட்டுப்பாதுகாப்பின்மைக்கும், சர்வதேச அமைதியின்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இரு உலக மகா யுத்தங்களையும் குறிப்பிட முடியும். உலக அரசியல்வாதிகள் சர்வதேச முரண்பாடுகளுக்கும், அமைதியின்மைக்கும் திருப்தியளிக்கக்கூடிய பதிலையளிக்க முன்வருவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் தாபனம்

உலக சமாதானத்தினைப் பாதுகாப்பது, பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவது, அமைதியான சர்வதேச கூட்டுறவினை வளர்ப்பது என்பதற்காக இறைமை கொண்ட தேசிய அரசுகள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட பாரிய ஓர் அமைப்பே ஐக்கிய நாடுகள் தாபனம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் ஆக்கிரமிப்பாளர்களாகிய பாசிஸ்டுக்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 26 ஆம் திகதி 51 தேசிய அரசுகள் கலந்து கொண்ட சான் பிரான்சிஸ்கோ (San Francisco) மகாநாட்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் கைச்சாத்திடப்பட்டது. ஆயினும் உத்தியோகப10ர்வமாக 1945 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24 ஆம் திகதியே ஐக்கிய நாடுகள் தாபனம் நடைமுறைக்கு வந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சாசனம் தாபனத்தின் நோக்கத்தினையும், செயற்பாட்டுத் தத்;துவத்தினையும், அதன் அங்கத்துவ நாடுகளின் செயற்பாட்டினையும், அமைப்பின் ஏனைய கிளைகளையும்,அக்கிளைகளின் செயற்பாட்டினையும், அதிகாரத்தினையும். நிதி நிர்வாகம் போன்றவைகளையும் எடுத்துக் கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதான கிளைகளாக: பொதுச்சபை,பாதுகாப்புச் சபை, தர்மகர்;த்தா சபை, சர்வதேச நீதிமன்றம், செயலகம், சமூக, பொருளாதார சபை என்பன காணப்படுகின்றன. இவற்றை விட விசேட சில துறைகளையும், துணை அமைப்புக்களையும் ஐக்கிய நாடுகள் தாபனம் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, இரஸ்சியா,பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளுடன் தற்காலிக அங்கத்துவ நாடுகளாக பத்து நாடுகள் உள்ளன. இவைகளே பாதுகாப்பு சபையினை வழி நடாத்தும் நாடுகளாகும். ஆயினும் ஐந்;து நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்குச் சாசனத்தின் சரத்து 23 இன் படி வீற்ரோ (Veto) என்னும் நிராகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சரத்து 51 இன்படி கூட்டுப்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த சில ஒழுங்குகள் விசேடமாகக் கூறப்பட்டுள்ளன. கூட்டுப்பாதுகாப்பு என்ற நிலையில் சர்வதேச அமைதியினையும், பாதுகாப்பையும் பேண உடனடி நடவடிக்கை எடுக்க பிரச்சினையுடன் தொடர்புடைய அரசுகளுக்கு உரிமையுண்டு. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் படி அதன் நோக்கம் சர்வதேச பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி அமைதியைப் பேணுவதாகும். கூட்டுப் பொறுப்புடன் இதனை ஐக்கிய நாடுகள் தாபனம் சாதிக்க முயலுவதன் நோக்கம் அமைதி என்பது அச்சுறுத்தப்படுவதனால் அதனை எல்லோரும் இணைந்தே பாதுகாக்க வேண்டும். எல்லோரும் இணைந்து ஆக்கிரமிப்பினை அடக்குதல் அல்லது அமைதியின்மையினை ஏற்படுத்தக்கூடிய ஏனைய அம்சங்களைச் சிதறடித்தல், சர்வதேச முரண்பாடுகளை சமாதானத்திற்குக் கொண்டு வருதல் போன்றவைகளுக்கு உழைக்க வேண்டும். தேசங்களுக்கிடையில் நட்புறவுகளை ஏற்படுத்திச் சர்வதேச சமாதானத்தினைப் பலப்படுத்திக் கொள்ளக்கூடியளவிற்கு ஏனைய அம்சங்களையும் அபிவிருத்தி செய்தல் வேண்டும். சர்வதேச சமூகப் பொருளாதார, மானிடவியல் பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைய வேண்டும். மனித உரிமைகளை கௌரவிக்கவும், வளர்க்கவும் வேண்டும். சமயம், மொழி, பால், வேறுபாடுகளின்றி எல்லோருடைய அடிப்படை உரிமைகளையும் கௌரவிக்கவும், வளர்க்கவும் வேண்டும். இவைகள் எல்லாம் கூட்டுப்பாதுகாப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய மையச் செயற்பாடுகளாகும். கூட்டுப் பொறுப்பு என்பது கூட்டுப்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதாகும். எல்லா அரசுகளும் கூட்டுப் பொறுப்புடன் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் பங்கு வகித்து அவற்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டும். தேசிய வளம், அரசுகளின் விஸ்தீரணம் என்பன கூட்டுப்பாதுகாப்பில் கவனத்தில் கொள்ளப்படக் கூடாது. பெரிய அரசுகளை விட சிறிய அரசுகளே கூட்டுப்பாதுகாப்புச் செயற்பாட்டில் அதிக நம்பிக்கை வைத்துள்ளன. வல்லரசுகள் இராணுவ, இராஜதந்திர, பொருளாதார ரீதியில் மிகவும் பலம் மிக்க நாடுகளாகும். வல்லரசுகள் தமது தேசிய நலனை உத்தரவாதப்படுத்திச் சர்வதேச ரீதியில் தமது அதிகாரத்தினை உச்சப்படுத்திக் கொள்ள மறைமுகமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலான சிறிய அரசுகள் வல்லரசுகளின் அதிகாரப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினை நாடுகின்றன. இதனால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வல்லரசுகளிற்கும், சிறிய அரசுகளிற்குமிடையில் சமமான பொறுப்புணர்வை வளர்க்கவும், பரஸ்பரம் ஒவ்வொரு அரசுகளும் ஒன்றை ஒன்று மதிக்கச் செய்யவும் தொடர்ந்து போராடுகின்றது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அனுபவத்தின்படி ஐக்கிய அமெரி;க்காவும், இரஸ்சி;யாவும் இரண்;டாம் உலகப் போரின் பின்னர் உலக அதிகாரத்தினை தம் வசப்படுத்திக் கொள்ளப் போராடி வந்திருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் தாபனம் தனது அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் சம இறைமைத் தத்துவத்தின் அடிப்படையில் வழிநடாத்துகின்றது. சர்வதேச முரண்பாடுகளைச் சமாதானமாகத் தீர்த்தல், படைபலத்தை உபயோகிக்காமை, ஏனைய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு உதவி வழங்க வேண்டும். சர்வதேச பாதுகாப்பு, அமைதி என்பவற்றை உத்தரவாதப்படுத்தக் கூடியளவிற்கு ஐக்கிய நாடுகள் தாபனத்தின் செயற்பாடு உருவாக்கப்படுகின்றது. சர்வதேச அரசியலில் ஐக்கிய நாடுகள் தாபனம் இரு முனைப் போராட்டத்தினை நடாத்த வேண்டியுள்ளது. ஒன்று சமாதான விரும்பிகள், முற்போக்காளர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் முனை, மற்றயது ஏகாதிபத்தியவாதிகளின் முனை என்பவைகளாகும்.

பிராந்தியக் கூட்டுப் பாதுகாப்பும் பிராந்திய ஒருமைப்பாடும்

பொதுவாக பிராந்தியம் என்ற சொல் புவியியல் அமைப்புடன் தொடர்புடையதாகும். பிராந்தியத்தினை அடிப்படையாகக் கொண்டே பிராந்திய ஒப்பந்தங்கள் செயப்படுகி;ன்றன. ஒரே புவிசார் பிரதேசங்களில் உள்ள அரசுகள் ஒன்றிணைந்து பிராந்தியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொள்கின்றன. உண்மையில் புவிசார் நிலை என்பதனை விட பெருமளவிற்கு அரசியல் நிலை என்பதே கூட்டுக்களைப் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன. இதனால் புவிசார் மையம் என்ற பதத்திற்குப் பதிலாகப் பிராந்திய இருதயம் என்ற பதம் புவியியல் ரீதியில் பயன்படுத்தப்படுகின்றது. இது பிராந்திய அரசுகளின் கூட்டில் ஏனைய அரசுகளையும் இணைத்துக் கொள்ள வாய்ப்பாகின்றது. கூட்டுச் சுயபாதுகாப்பு என்பது புவியியல் மையத்தின் தன்மையினைப் பொறுத்து ஏனைய பிராந்திய அரசுகளுடனும் ஐக்கியத்தினை ஏற்படுத்திவிடுகின்றது. கூட்டுப் பாதுகாப்பினை உருவாக்குவதில் பின்வரும் இரு பண்புகள் பயன்பட்டு வந்திருந்தது. ஒன்று ஒரே வகையான அரசியல் சித்தாந்தம், மற்றையது பொருளாதார நலனில் பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் தங்கியிருத்தல். இவ் இரண்டு பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவுடனும், இரஸ்சியாவுடனும் சர்வதேச அரசுகள் கூட்டுப்பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்தன. .ஐக்கிய அமெரிக்காவுடன் மேற்கு ஐரோப்பிய நடுகளும், சில பொதுநலவாய நாடுகளும், சில அராபிய, ஆபிரிக்க நாடுகளும் பிராந்தியக் கூட்டுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்தன. இரஸ்சியாவுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், சில ஆசிய நாடுகளும் பிராந்தியக் கூட்டுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்தன.

‘பிராந்திய ஒருமைப்பாடு’ என்ற பதத்திற்கு மேற்கு ஐரோப்பாவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அரசியலில் விளக்கமளிக்கப்படுகின்றது. ‘ஒருமைப்பாடு’ என்ற பதம் வெவ்வேறு தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு அப்பால் சென்று, அரசியல் ஐக்கியத்திற்கான தேவையினை வலியுறுத்தி நிற்கின்றது. ஆயினும், 1960 களில் தான் ‘பிராந்திய ஒருமைப்பாடு என்பது ஒரு கற்கை நெறியாகச் சர்வதேச அரசியலுக்குள் வளரத் தொடங்கியது.

‘ஒருமைப்பாடு’ என்ற பதத்தினைச் சட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் நிலைநிறுத்த முடியும் என்ற சிந்தனை சமஸ்டி முறை பற்றி ஏற்கனவே நிலைத்திருந்த சிந்தனையூடாக உருவாகியிருந்தது. சமஸ்டி முறையாளர்கள் ‘ஒருமைப்பாடு’ என்பது சர்வதேசச் சமூகத்தின் முன் நோக்கிய பாச்சல் என்பதை விட ‘தூர இலக்கு’ எனக் கூறுகின்றார்கள். சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் சமஸ்டி முறையில் இணைந்து கொண்ட சுதந்திரமான பிரதேசங்கள் இணைவுக்குப் பின்னர் தாம் ஏற்கனவே வைத்திருந்த இறைமையினைத் தொடர்ந்தும் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டனவோ அவ்வாறே உலக நாடுகளுக்கிடையிலான சமஸ்டி முறைமையில் ஒருமைப்பாடு ஏற்படுத்தப்படலாம். அதேநேரம், உலக அளவு, பிராந்திய அளவுää ஆகிய இரண்டையும் கருத்திலெடுத்தே உலக சமஸ்டி முறை பற்றி யோசிக்க முடியும் எனக் கூறுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் உலகத்தினை சமஸ்டி முறைக்குள் கொண்டு வருவது சாத்தியமற்றதும், கற்பனையானதுமாகவே இருந்தது.

ஒருமைப்பாடு தொடர்பாக ‘தொடர்பாடல் அணுகுமுறை’ ஒன்றினை கால்டூச் (Karl W. Deutsch) முன்வைக்கின்றார். உள் குடியேற்றம், கல்விமான்கள் பரிமாற்றம், உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகம் போன்ற சர்வதேச விவகாரங்கள் மூலம் ஒருமைப்பாட்டிற்கான வழிவகைகளை உருவாக்க முடியும். சமூக, அரசியல் ஒருமைப்பாட்டிற்கு அல்லது பாதுகாப்பான சமுதாய உருவாக்கத்தினை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கூறிய சர்வதேச விவகாரங்கள் தலைமை தாங்க முடியும். எனவே பாதுகாப்பான சமுதாய உருவாக்கத்திற்கான ஒருமைப்பாட்டினை டூச் இரண்டாகப் பிரிக்கின்றார். முதலாவது ஒன்றிணைக்கப்பட்ட தன்மை கொண்டது. மற்றையது பன்மைத் தன்மை கொண்டதாகும்.

ஒன்றிணைக்கப்பட்ட சமுதாய பாதுகாப்பிற்குச் சிறந்த உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவினைக் கூறிக் கொள்ளலாம். இங்கு சமஸ்டி அரசாங்க முறையின் கீழ் பல அரசுகள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றன.

பன்மைத் தன்மை வாய்ந்த சமுதாயப் பாதுகாப்பில் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் இருக்காது. ஆனால் தேசிய அரசியல் பிரதேசங்கள் தமக்கிடையில் உள் குடியேற்றம், கல்விமான்களின் பரிமாற்றம், உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகம் போன்ற தொடர்பாடல்களைத் தமக்குள் கொண்டிருக்கும். ஆனால், தமது எல்லைப் பிரதேசங்களைப் பலப்படுத்த வேண்டும் என்றோ தமக்குள் ஒருவருடன் ஒருவர் சண்டையில் ஈடுபட வேண்டுமென்றோ எதிர்பார்ப்பதில்லை. பன்மைத் தன்மை வாய்ந்த சமுதாயப் பாதுகாப்பானது, இயற்கையாக உள்ள பாரிய நிலப்பரப்பை கொண்டதாகவும் இருக்கும். உதாரணமாக அமெரிக்கக் கண்டம், ஐரோப்பாக் கண்டம் போன்றவற்றைக் கூறலாம். ஆனால் அரசியல் ஐக்கியத்திற்கான பாதை ஆயுதப்பலத்தினூடாக பெறப்பட்டிருப்பதை வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள முடிகின்றது. தேசிய, பிரதேச அல்லது சர்வதேச மட்டத்தில் அரசியல் நடிகர்களுடைய தோற்றம் சிக்கலானதும், அசாதாரணமானதாகவுமுள்ளது. இந்நிலையில் தொடர்பாடல் அணுகுமுறையும், சமஸ்டி முறைமையும் ஒருமைப்பாடு பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது எனலாம்.

ஒருமைப்பாட்டு அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியங்களை வரைவிலக்கணப்படுத்தும் போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுவாக அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற கண்டங்கள் தொகுதியான நிலப்பரப்பினைக் கொண்டு பிராந்தியங்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. துரதிஸ்டவசமாகப் பிராந்தியம் ஒன்றை வரைவிலக்கணப்படுத்தும் போது அப்பிராந்திய மக்களுக்கு இருக்க வேண்டிய “பிராந்திய உணர்வு” இங்கு இல்லாமல் இருப்பது பெரும் சிக்கலாக உள்ளது. உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தின் கிழக்குப் பகுதி அரசுகள் “சோசலிச அரசுகள்” என அழைக்கப்பட்டன. ஆபிரிக்க கண்டத்தின் வட பகுதி (அரபு மொழி பேசும் இஸ்லாமிய சமய மக்கள் வாழும் பகுதி) மத்திய கிழக்குப் பிராந்தியம் என அழைக்கப்பட்டது.ஆயினும் பிராந்தியங்கள் பின்வரும் வகையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

1. புவியியல் தன்மை:-

கண்டங்கள், உப கண்டங்கள், தீவுக் கூட்டங்கள் போன்றவற்றின் புவியியல் வதிவிடங்களை அடிப்படையாகக் கொண்டு அரசுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக ஐரோப்பா, ஆசியா, போன்றவற்றைக் கூறலாம்.

2. இராணுவ, அரசியல் தன்மை:-

இராணுவக் கூட்டுக்கள், சித்தாந்தம், அரசியல் தன்மை போன்றவற்றின் அங்கத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக கம்யூனிச முகாம் நாடுகள், முதலாளித்துவ முகாம் நாடுகள், மூன்றாம் மண்டல நாடுகள், நேட்டோ, வோர்சோ போன்றவற்றைக் கூறலாம்.

3. பொருளாதாரம்:-

தெரிவு செய்யப்பட்ட பொருளாதார உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தேசிய அரசுகளை உள்ளடக்கிய பிராந்தியம்

4. சர்வதேச விவகாரங்கள்:-

உள்குடியேற்றம், உல்லாசப் பிரயாணம், வர்த்தகம், தொடர்பாடல் போன்ற மக்களின் பொருட்கள், சேவைகளின் பரிமாற்றத்தின் அளவினை அடிப்படையாகக் கொண்ட தேசிய அரசுகள் உள்ள தொகுதி. உதாரணமாக கிழக்கு ஐரோப்பா சோவியத் யூனியனின் சந்தையாக இருந்தமையினைக் கூறலாம்.

இவற்றை விட மொழி, சமயம், கலாசாரம், சனத்தொகை, காலநிலை போன்ற விடயங்களும் பிராந்தியங்களை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பிராந்திய ஒழுங்கமைப்புப் பற்றிய சிந்தனை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே அபிவிருத்தியடைந்திருந்தது. பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் பின்வரும் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

  1. பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் – நேட்டோ, வோர்சோ
  2. பொருளாதார பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் – ஐரோப்பிய சமூகம், பரஸ்பர பொருளாதார உதவிக்கான சங்கங்கள், இலத்தீன் அமெரிக்க சுதந்திர வர்த்தக நிலையம்.
  3. பல்நோக்குச் செயற்பாடு கொண்ட பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் –
  4. கலாசார, இராணுவ, பொருளாதார, அரசியல் விடயங்கள் முதன்மையாகக் கொண்டு இவைகள் உருவாக்கப்படுகின்றன. – ஐக்கிய அமெரிக்க ஒழுங்கமைப்பு, அரபு லீக்,பொதுநலவாய நாடுகள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான கெடுபிடி யுத்த சூழ்நிலையும், உலக கூட்டுப்பாதுகாப்பிற்கான கனவின் சிதைவும் பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு அபிவிருத்தியடைந்து வந்தமைக்கு முதன்மையான காரணிகளாகும். ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும் மனோபாவத்தின் வளர்ச்சியினால் 1940 களிலும், 1950 களிலும் அனேக பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு 1949 ஆண்டு உருவாக்கப்பட்;ட நேட்டோ ஒழுங்கமைப்பையும், 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வோர்சோ ஒழுங்கமைப்பையும், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அன்சுஸ் (ANZUS) (அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா) ஒழுங்கமைப்பையும், 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீற்ரோ (Seato) ஒழுங்கமைப்பையும் கொள்ள முடியும். இவ் அமைப்புக்கள் அனைத்தும் நகரும் உலக அதிகாரம் என வர்ணிக்கப்படக் கூடியளவிற்கு தென்கிழக்காசியா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, போன்ற பிரதேசங்களில் ஐக்கிய அமெரிக்காவினால் தனது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவைகளாகும். இவற்றை விட 1955 ஆம் ஆண்டு பிரித்தானியா தலைமையில் உருவாக்கப்பட்டுப் பாக்தாத் (Baghdad Pact) என அழைக்கப்பட்டதுடன், 1959 ஆம் ஆண்டிற்கு பின்னர் சென்டோ (Cento) என அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்கா மறைமுகமாக இணைந்து கொண்டது. அதேபோல சோவியத் ய10னியன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டத்திற்கு அவசியமான பிராந்தியப் பாதுகாப்பினை வோர்சோ (Warsaw) என்ற பெயரில் 1955 இல் நிறுவிக் கொண்டது.

உலகம் முழுவதையும் இராணுவக் கூட்டுக்குள்ளாக்கியது போன்று உருவாக்கப்பட்ட கூட்டுக்களைப் பிராந்தியப் பாதுகாப்பிற்கான ஒழுங்கமைப்புக்கள் என வேறுபட்ட பரிமாணங்களில் வகைப்படுத்திக் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். உதாரணமாக இப்போது தொழிற்படாது இருக்கும் சீற்ரோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக் கூடுதலாக 11,500 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. அதேபோல நேட்டோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக்கூடுதலாக 5,500 மைல் இடைவெளி காணப்பட்டிருந்தன. அமெரிக்க அரசுகளின் ஒழுங்கமைப்பில் (OAS) பங்கேற்றிருந்த அரசுகளுக்கிடையே ஆகக்கூடுதலாக 5,300 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. வோர்சோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக் கூடுதலாக 3,900 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு பங்குனி மாதம் செயலிழந்த சென்ரோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக்கூடுதலாக 3,700 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. பூமியின் மொத்த சுற்றளவு ஏறக்குறைய 25,000 மைல்களாகும். இதில் சீற்ரோ என்ற பிராந்திய ஒழுங்கமைப்பு ஏறக்குறைய ½ பங்கினைத் தனக்குள் எடுத்திருந்தது. எவ்வாறாயினும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சோவியத் ய10னியனின் இராணுவப் பாதுகாப்பினை அல்லது ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டு அவற்றைத் தேடிச் செல்கின்ற சிறிய தேசிய அரசுகளினதும், தந்திரோபாய நிலையில் பக்கம் சாராத தேசிய அரசுகளினதும் விருப்பத்துடன் இரு துருவ அதிகாரங்களையும், சித்தாந்தங்களையும் பிரதிபலிக்கின்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் வல்லரசுகளுக்கு இடையிலான பதட்டத்தினை அல்லது கெடுபிடியை ஒவ்வொரு நிமிடமும் உறுதியாக்கக் கூடிய நிறுவனங்களாகவே காணப்பட்டிருந்தன. ஆனாலும் இப்பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் பரஸ்பர தந்திரோபாய அந்தஸ்தினைப் பேணிக்கொள்வது, வல்லரசுகளுக்கிடையிலான நேரடி யுத்தத்தினை தவிர்ப்பது போன்ற தமது முதன்மையான நோக்கங்களை அடைந்திருந்தமையினை மறுக்கமுடியாது. எடுத்துக் காட்டுக்களாக உலக யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கு,மேற்கு ஐரோப்பாவைப் பின்னணியாக கொண்ட கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுகள். மூன்றாம் மண்டல நாடுகளில் ஏற்பட்ட அரபு-இஸ்ரேல்,இந்திய-பாகிஸ்தான்,இந்திய-சீன முரண்பாடுகள் ஆகியன தந்திரோபாய செயற்பாடுகளாலும், அணுகுண்டின் அச்சுறுத்தலாலும் பெரும் யுத்தங்களாக மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல காலனித்துவத்திற்கு எதிரான யுத்தம் அல்லது தேசிய விடுதலைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், இராணுவப் புரட்சி போன்ற முரண்பாடுகள் தந்திரோபாயச் செயற்பாடுகளால், சிறப்பாகக் கையாளப்பட்டிருந்தன. ஆயினும், பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தம் அங்கத்துவ நாடுகளுக் கிடையில் எற்படும் முரண்பாடுகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தன. குறிப்பாக அமெரிக்க அரசுகளின் ஒழுங்கமைப்புக்களில் (OAS) அங்கத்துவம் வகிக்கும் எல்சல்வடோர், கொண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும், நேட்டோவில் அங்கம் வகிக்கும் கிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் வோர்சோவில் அங்கம் வகிக்கும் செக்கொஸ்லேவேக்கியா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்பிற்குப் பாரிய பிரச்சினைகளை எற்படுத்தியிருந்தன.

வட அத்திலாந்திக் ஒப்பந்த தாபனம் (நேட்டோ)

இது முதலாளித்துவ நாடுகளின் அரசியல் இராணுவக் கூட்டமைப்பாகும். 1949 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க், போர்த்துக்கல், நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இவ் அமைப்பினை உருவாக்கிக் கொண்டன. 1952 ஆம் ஆண்டு கிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளும், 1955 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியும், 1982 ஆம் ஆண்டு ஸ்பெயினும் இவ் அமைப்பில் இணைந்து கொண்டன. நேட்டோ அமைப்பின் ஆளுனர் சபையில் இரு பிரிவுகள் உள்ளன.

  1. வட அத்திலாந்திக் கவுன்சில்
  2. பாதுகாப்பு திட்டமிடல் குழு

என்பனவாகும். வட அத்திலாந்திக் கவுன்சில் இரு வருடத்திற்கு ஒரு முறை வெளிவிவாகார அமைச்சர்கள் மட்டத்தில் கூட்டப்படும். நாளாந்த செயற்பாடுகள் நேட்டோ பொதுச் செயலாளர் தலைமையில் அங்கத்துவ நாடுகளின் சர்வதேச விவகார செயலாளர்களினால் மேற்கொள்ளப்படும். நேட்டோவின் இராணுவ அமைப்பினை பாதுகாப்பு திட்மிடல் குழு நெறிப்படுத்துகின்றது. இராணுவ அமைப்பினுள் அணு திட்டமிடல் குழு 1967 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. அணு ஆயுதங்களுடன் தொடர்புடைய விடயங்களை நெறியாள்கை செய்யும் இக்குழுவின் கூட்டத்தொடரில் அங்கத்துவ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். இதனை விட யூரோ குழு என்று ஓர் அமைப்பு 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது நேட்டோவில் உள்ள ஐரோப்பிய அங்கத்தவர்களுக்கிடையிலான இராணுவக் கூட்டுறவினை முகாமைத்துவப்படுத்தியது.

உண்மையில் நேட்டோ ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம் பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றைப் பேணிக் கொள்வதனூடாகக் கூட்டுப்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதாகும். இவ்வகையில் பொதுவான ஐரோப்பியக் கூட்டுப்பாதுகாப்பு முறைமையின் கீழ் இக் கூட்டு முதன்மை பெற்றிருந்தது. இதன் அர்த்தம் யாதனில் ஐரோப்பாவினூடாக உலகத்தில் ஆயுதப் போட்டியினையும், இராணுவ அபாயத்தினையும், சர்வதேசப் பதட்டத்தினையும் இல்லாதொழிப்பதாகும். இதற்காக நேட்டோவின் வரவு செலவுத் திட்டத்தில் இராணுவ செலவீனங்களுக்கான தொகையில் வருடாந்த அதிகரிப்பினை மூன்று வீதத்தால் அதிகரிக்கும்படி ஐக்கிய அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. 1978 ஆம் ஆண்டு நேட்டோ அங்கத்தவர்களின் பலத்தினைக் கூட்டும் நோக்கத்துடன் ஒரு நீண்ட காலத் திட்டமாக 1933 ஆம் ஆண்டு வரை இவ் அதிகரிப்பை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஐக்கிய அமெரிக்கா மத்திய தூர ஏவுகணைகளை மேற்கு ஐரோப்பாவில் விரிவாக்கியதனைத் தொடர்ந்து வோர்சோவினதும், நேட்டோவினதும் இராணுவ தந்திரோபாய சமநிலையில் பதட்டம் ஏற்பட்டது. 1985 ஆம் ஆண்டு நேட்டோவின் ‘அணு திட்டமிடல் குழு தந்திரோபாயப் பாதுகாப்பிற்கான ஆரம்பம்’ என்பதற்கு ஆதரவு கொடுத்திருந்தது. இதன் விளைவாக மேற்கு ஐரோப்பாவில் இரசாயன ஆயுதங்களை உபயோகிக்க ஐக்கிய அமெரிக்கா எடுத்த முடிவினை நேட்டோ ஏற்று நடைமுறைப்;படுத்த முற்பட்டது. இதனால் ஐக்கிய அமெரிக்காவிற்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையில் அரசியல் பொருளாதார நலன்கள் தொடர்பான முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது. இது அங்கத்துவ நாடுகளுக்கிடையில் முரண்பாடுகள் வளர்வதற்கு இடம் விட்டது. பிரான்ஸ், கிறீஸ், ஸ்பெயின் என்பன இராணுவக் கூட்டிலிருந்து வெளியேறின. டென்மார்க், கிறீஸ் ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்க ஏவுகணை மேற்கு ஐரோப்பாவில் வி;ஸ்தரிக்கப்படுவதனை எதிர்த்தன. பிரான்ஸ் டென்மார்க், நோர்வே,கிரேக்கம், நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகள் ‘ஐக்கிய அமெரிக்காவின் தந்திரோபாய பாதுகாப்பு ஆரம்பத்திட்டத்தில் பங்கு வகிப்பதை நிராகரித்தன.

வோர்சோ

இது ஐரோப்பிய சோசலிச அரசுகள் பாதுகாப்பு நோக்கத்துடன் உருவாக்கிய இராணுவ -அரசியல் கூட்டமைப்பாகும். சோசலிச அரசுகளுக்கிடையில் நட்புறவுகளையும், கூட்டுறவினையும், பரஸ்பர உதவியினையும் வளர்ப்பதை இது இலக்காகக் கொண்டிருந்தது. 1955 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14ஆம் திகதி அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லேவேக்கியா, கிழக்கு ஜேர்மனி, கங்கேரி, போலந்து, ரூமேனியா, சோவியத் ரஸ்சியா என்பன போலந்தின் தலைநகர் ‘வோர்சோவில்’ இப் பாதுகாப்புக் கூட்டிற்கான அமைப்பில் கைச்சாத்திட்டிருந்தன. சோசலிச அரசுகளால் உருவாக்கப்பட்ட இத்தாபனம் தங்களுக்கு எதிராக நேட்டோ அணிகளிடம் இருந்து அதிகரித்து வரும் இராணுவ – அரசியல் பயமுறுத்தலைத் தடுப்பதற்கும், அவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பாக இருந்ததுடன், நேட்டோ பிரகடனப்படுத்தியிருந்த ஐரோப்பிய பாதுகாப்பு முறைமையை உருவாக்குவது என்பதிலிருந்தும் தம்மை பாதுகாக்க முனைந்தது. இதனால் வோர்சோவின் இலக்கு அங்கத்துவ நாடுகளைப் பாதுகாப்பது ஐரோப்பாவில் அமைதியைப் பேணுவது என்பதாக இருந்திருந்தது.

அரசியல் ஆலோசணைக் குழு (Political Consultative Committee) என்பதே வோர்சோவின் உயர் அமைப்பாகும். அங்கத்துவ நாடுகளின் நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இது கூட்டாகத் தீர்வு காண்கின்றது. 1976 ஆம் ஆண்டு அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும், இணைச் செயலாளர்களையும் அங்கத்தவர்களாகக் கொண்ட கீழ் நிலை அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

1969 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் குழு ஸ்தாபிக்கப்பட்டது. வோர்சோவின் அங்கத்துவ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள், கூட்டு இராணுவ தளபதிகள் போன்றவர்களை இது உள்ளடக்கியிருக்கும். அங்கத்துவ நாடுகளின் தீர்மானங்களையும், பிரேரணைகளையும் பாதுகாப்பு அமைச்சர் குழு கூட்டாக அமுல்படுத்துவதன் மூலம் அங்கத்துவ நாடுகளின் ‘பாதுகாப்பு பலம்’ என்பது வளர்ச்சியடையக் கூடியதாக இருந்தது. வோர்சோ அமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான உறவு மாக்சிச – லெனினிசம், சமத்துவம், சுதந்திரம், தேசிய இறைமை, உள்விவகாரங்களில் தலையிடாமை, பரஸ்பர முன்னேற்றங்கள், பரஸ்பர தோழமை உதவிகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது.

தென்கிழக்காசிய ஒப்பந்த தாபனம் – சீட்ரோ

1954 ஆம் ஆண்டு, புரட்டாதி மாதம் 8ஆந் திகதி மனிலாவில் ஸ்தாபிக்கப்பட்ட ஓர் இராணுவ-பொருளாதார கூட்டாகும். மனிலாவில் உருப்பெற்ற கூட்டாகையால் இது ‘மனிலா ஒப்பந்தம்’ எனவும் அழைக்கப்படுவதுண்டு. இதில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகள் அங்கம் வகித்தன. இவ் ஒப்பந்தத்தின் அவசியம் பற்றி வியட்நாமிய புரட்சியின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவினால் எடுத்துக் கூறப்பட்டது. தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் கம்ய10னிசம் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதில் ஐக்கிய அமெரிக்கா அக்கறை கொண்டிருந்தது. தென்கிழக்காசியாவில் வியட்நாம்ää தென் கொரியா போன்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளில் கம்யூனிசம் பரவியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்காசியக் கூட்டில் தென்கிழக்காசியப் பிராந்தியத்தினைச் சேராத பல நாடுகள் அங்கம் வகித்தன. உதாரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, பாகிஸ்தான் போன்றன. இதில் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, என்பன மட்டுமே தென்கிழக்காசிய நாடுகளாகும். மலேசியா, இந்தோனேசியா உட்பட , ஏனைய கம்ய10னிச நாடுகளும் இதில் அங்கம் வகிக்கவில்லை 1975 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகியன இவ் அமைப்பினை கலைத்து விடும்படி ஓர் பிரேரணையினைக் கொண்டு வந்தாலும் 1977 ஆம் ஆண்டு வரை இது நடைமுறையில் இருந்திருந்தது.

தென்கிழக்காசிய நாடுகளின் தாபனம் . ஏசியன்

1967 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பிராந்திய அரசியல் பொருளாதார கூட்டாகும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், புரூனே என்பன இதில் அங்கம் வகிக்கின்றன. இதன் உத்தியோகப10ர்வமான நோக்கம் தென்கிழக்காசியாவின் சமூக முன்னேற்றம், கலாசார அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி என்பவற்றை துரிதப்படுத்துவதாகும். அத்துடன், இவ்வமைப்பு இதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பினையும் உத்தரவாதப்படுத்துகின்றது. இப்பிராந்திய அரசுகளின் தேசிய சுதந்திரம் என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படக்கூடாது என்பதில் இவ்வமைப்பு அவதானமாக உள்ளது. வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலான மகாநாடே இவ் அமைப்பின் உயர் கருவியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக எளிய இராணுவ, அரசியல், பொருளாதார கூட்டுக்களுடன் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவுடன் கட்டுண்டு இருக்கும் கூட்டுக்களுடன் கொண்டிருந்த உறவு ஏசியனின் செயற்பாட்டினை முதன்மைப்படுத்தியிருந்தது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா வியட்நாம் மீது படை எடுத்த போது தாய்லாந்தும், பிலிப்பைன்சும் ஐக்கிய அமெரி;க்கா சார்பாக நேரடியாகக் கலந்து கொண்டது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் மறைமுகமாக அரசியல், பொருளாதார, நெறிமுறை ஆதரவு கொடுத்திருந்தது. ஆயினும் ஐக்கிய அமெரிக்கா வியட்நாமிற்குள் ஏசியன் அமைப்பின் கூட்டுப்படையினை அனுப்புவதில் வெற்றியடையவில்லை. 1976 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஏசியன் அமைப்பின் உச்சி மகாநாட்டில் கிழக்காசியப் பிராந்தியத்தினை “சமாதான வலையமாக்குவது, சுதந்திரப் பிராந்தியமாக்குவது, நடுநிலைப் பிராந்தியமாக்குவது” என்ற பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரகடனமாக வெளியிடப்பட்டது. இந்தோனேசியா மீதான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புத் தோல்வி கண்டதைத் தொடர்ந்து வியட்னாம், லாவோஸ் என்பன தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் அரசியல் நிலையினை கருத்தில் எடுத்து ஏசியன் அமைப்புடன் உறவுகளை வளர்க்கத் தொடங்கியது.

அராபிய லீக்

இது அராபிய நாடுகளின் பிராந்தியக் கூட்டாகும். இதில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 1945 ஆம் ஆண்டு, பங்குனி மாதம் 22ஆந் திகதி நடைபெற்ற கைரோ மகாநாட்டின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதில் எகிப்து, ஈரான், சிரியா, லெபனான், ஜோர்தான், சவுதி அரேபியா, யேமன், லிபியா, சூடான், ருயுனிசியா, மொராக்கோ போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வமைப்பு அங்கம் வகிக்கும் அங்கத்தவர்களுக்கிடையில் அரசியல், பொருளாதார, இராணுவ செயற்பாட்டினை உறுதிப்படுத்துகின்றதுடன், லீக்கின் அங்கத்துவ நாடுகளுக்குகி டையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் படைபலத்தை உபயோகிப்பதையும் இவ் அமைப்பு தடுக்கின்றது. இதன் ஆளுனர் சபையானது அங்கத்துவ நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியதாக காணப்படும். இதனுடன் இணைந்ததாகக் கூட்டுப்பாதுகாப்பு அமைப்பு, அராபிய பொருளாதார அமைப்பு, நிரந்தர இராணுவ ஆணைக்குழு, அரசியல் குழு, ஏனைய குழுக்கள் என்பன செயற்படும். ஆளுனர் சபையின் செயலாளர் ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின்றார். அராபிய மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு அராபிய லீக் முக்கிய பங்காற்றுகின்றது. அராபிய உலகிற்கு இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்காகவும், குறிப்பாக இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அராபிய அரசுகளை ஒன்றுபடுத்தி போராட வைப்பதில் அரபு லீக் முக்கிய பங்காற்றுகின்றது. மத்திய கிழக்கு முரண்பாட்டைத் தீர்த்துவைப்பது, பாலஸ்தீனப் பிரச்சினையினைத் தீர்த்து வைப்பது என்பவைகள் இதன் பிரதான நோக்கமாகவுள்ளது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,105 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>