பொருத்தமாக காணிக் கொள்கையினை வலியுறுத்தும் எல்.எல்ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.26, 2014.04.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான விடயங்கள் குறிப்பாக வேளாண்மை, மீன்பிடித்தல், காணி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவது அவசியமாகும். மக்கள் நாளாந்த வாழ்க்கைக்கு திரும்புவதற்கும், சமாதானத்தின் நன்மைகளை அனுபவிப்பதற்கும் வசதியாகப் படையினரின் பிரசன்னம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் எனவே “மோதலுக்குப் பின்னர் மக்கள் காணி உரிமையினை திரும்பப்பெற முயற்சிப்பதனால் காணிப் பிரச்சினைகள் பெரும்பாலும் உணரப்படுகின்றன. மோதலுக்குப் பின்னரான சூழலில் அகதிகள் வீடு திரும்புவது ஒரு சாதாரண விடயம் அல்ல என கூறப்படுகின்றது. இது ஒரு சிக்கலான பிரச்சனையாகும். மற்றும் ஒவ்வொரு நிலைமையும் வேறுபடுகின்றது. மோதலானது ஒரு உயர் உருமாற்றல் செயல்முறையாகும். விரும்பத்தக்கதாக இருந்தாலும் கூட போருக்கு முந்தைய நிலைமை முற்றிலும் மீள நிறுவ முடியாது” என சரா பண்டுலியானோ கூறும் கருத்து இலங்கையின் மோதலுக்குப் பிந்திய நிலைமையுடன் சமமாக பொருந்துவதுடன் இந்த யதார்த்தமான தன்மையினை கணக்கில் எடுக்கும்படி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மீள்குடியேற்றம்,மீள்இணைவு

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக ஆணைக்குழு பலரின் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டது. இதனடிப்படையில் ஆணைக்குழு தனது சிபார்சுகளை முன்வைத்துள்ளது. பெரும்பாலான மக்கள் தற்காலிக குடிசைகளிலேயே இன்னமும் வாழ்கின்றனர். சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியவர்கள் வீடுகளைத் திருத்துவதற்கு அல்லது நிரந்தரமாக வீடுகளைக் கட்டுவதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்குப் போதுமான ஏற்பாடுகள் வழங்கப்படல் வேண்டும்.

மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக காணி உரிமையினை வழங்கும் தேவையுள்ளது. மீள்கட்டுமானத்தின் பொருட்டும் தமது வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் பொருட்டும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் சமூகத்தினருக்கு உதவும் விதத்தில் அடிமட்டத்தில் சமூக அபிவிருத்திகளில் ஈடுபடுவதற்கு சிவில் அமைப்புக்கள் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.

சுயமாக மீள்குடியேற வருவோரை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றும் போது ஆட்களின் நடமாடும் சுதந்திரத்தினை மதிப்பது அவசியமானதாகும். இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த மக்கள் இலங்கைக்கு திரும்பிவந்து தாம் விரும்புகின்ற இடத்தில் மீளக் குடியமர்வதற்கு அரசாங்கம் வசதிகளை வழங்கி அதற்கு ஊக்குவித்தல் வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு திரும்புவது தொடர்பாக சிந்தித்து தீர்மானமொன்றினை எடுப்பது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் முறைசார்ந்த இருபக்க ஆலோசனைகள் இடம்பெற வேண்டும்.

1990ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலால் வடமாகாணத்திலிருந்து உள்ளுரில் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றமும் யுத்தத்திற்குப் பின்னரான சவால்களில் முக்கியமானதாகும்.இது நல்லிணக்கச் செயற்பாடுகளின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினையும் கொண்டுள்ளது. எனவே மீளக் குடியமர்த்தப்படுதல் தொடர்பில் மக்களின் தொடர்ச்சியான தேவை பற்றி கவனம் செலுத்துவது அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு மிகவும் அவசியமானதாகும்.

படைகளை செறிவுநீக்குதல்

வட மாகாண மக்களின் நாளாந்த வாழ்க்கை குறிப்பாக விவசாயம், மீன்பிடித்தல், காணி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவது அவசியமாகும். சிவில் நிர்வாக வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதற்கும், சமாதானத்தின் நன்மைகளை அனுபவிப்பதற்கும் வசதியாக வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பு படைகள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு படையினர் தமது கடமைகளில் ஈடுபடுவதுடன், மீள் கட்டுமான பணிகளில் தொடர்ந்து பங்களிப்புச் செய்தாலும், சில மாவட்டங்களில் தனியார்களுக்கு சொந்தமான நிலங்களில் சிறு வர்த்தகத்திலும், விவசாயத்திலும் படையினர் ஈடுபடுகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சில அரசாங்க கட்டடங்கள், தனியார் காணி /கட்டடங்கள் என்பன பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படுகிறது.

சில மாவட்டங்களில் சில சந்தர்பங்களில் வீடமைப்பிற்கு தேவையான பயனாளிகளைத் தெரிவு செய்வதிலும் படையினரின் அனுமதி தேவைப்படுகின்றது. பொதுவாகக்கூறின் எல்லாவற்றுக்கும் மக்கள் இராணுவ முகாம்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கிராமசேவகர்கள் கூட இராணுவம் கூறுவதைக் கேட்க வேண்டியுள்ளது. காவல்துறை அதிகாரிகளும் இராணுவம் கூறுவதைக் கேட்க வேண்டியுள்ளது.

இந் நிலைமைகள் கட்டாயம் மாற்றப்பட்டு மக்களாட்சி மீண்டும் கொண்டுவரப்படல் வேண்டும்.சிவில் நடவடிக்கைகளிலும், தனியார் காணிகளை பயன்படுத்துவதிலும் பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டை நியாயமான கால அவகாசத்தில் படிப்படியாக குறைக்க வேண்டும்.

உயர் பாதுகாப்பு வலயம்

உயர் பாதுகாப்பு வலயம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் உரிமைக் காணிகளை மீளளித்தலில் உள்ள சிரமங்கள் உள்ளடங்கலாக உயர்பாதுகாப்பு வலயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக ஆணைக்குழு முன் சாட்சியளிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் ஆரம்பத்தில் ஒடுங்கிய நிலப்பரப்பாக இருந்த உயர் பாதுகாப்பு வலயமானது பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டது.

சம்பூரில்ல் உள்ள மக்கள் தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடித் தொழிலை செய்து சமாதானமாக வாழ்ந்து வந்தனர். யுத்தம் சம்பூர் பகுதிவரை விரிவாக்கப்பட்டதால் சம்பூர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சம்பூரில் 5,000 ஏக்கர் காணி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், 1,600 மக்கள் இன்னும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழ்கின்றனர்.

பல வருடங்களாக பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு காணிகளில் படையினர் தங்கியிருக்கின்றனர். ஆயினும் வீடமைப்பு மற்றும் விவசாயக் காணிகள் வரையறுக்கப்பட்ட அளவில் விடுவிக்கப்பட்டுள்ளன.

பலாலி உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயம் ஆகிய இரண்டும் நீண்டகால பிரச்சினையாகும். 2000ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக பலாலியை சுற்றியூள்ள தனி நபர்களுக்கு சொந்தமான பல காணிகளை அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழவிடுதலைப் புலிகள் தங்கியிருந்த சில பகுதிகள் தற்போது பாதுகாப்புப் படையிரால் பயன்படுத்தப்படுவதுடன், இப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற முடியாமல் உள்ளது.

சில தனியார் காணிகள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மூத்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் ஏற்றுக்கொண்டார்.ஆயினும் அவர்கள் அதனை விடுவிப்பார்கள் என்று கூறியுள்ளார். இதன்படி பலாலி, சம்பூர் ஆகிய இடங்களிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட்டு 21,491 மக்கள் மீள்குடியேறியுள்ளதை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும், இரு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திலுள்ள 26,755 மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

எனவே பலாலி மற்றும் சம்பூரில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் சிறிதளவு தனியார் நிலங்களை தேசிய பாதுகாப்புக் கருதி பயன்படுத்திக்கொண்டு மேலதிக நிலங்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என ஆணைக்குழு பாரிந்துரைத்துள்ளது.

அத்துடன் முறைசார உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக அல்லது ஏனைய முறைசாராத அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக் காரணிகளினால் காணியை அல்லது வீடுகளை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாற்று நிலங்கள் அல்லது பொருத்தமான சட்டத்தின்படி இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

காணி இழப்பு

நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் ஒரு நாட்டில் உடனடியாக யுத்தத்திற்கு முன்னுள்ள நிலையினை ஏற்படுத்த முடியாது.ஆயினும் சட்ட விரோத காணிப் பரிமாற்றம். வன்முறையால் செய்யப்படும் உரிமை மாற்றம், அச்சுறுத்தல்,இன அழிப்பு என்பன என்றும் நிலைத்திருப்பதற்கு அல்லது நிறுவனமயப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பனவற்றுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். இதற்குத் தீர்வு காணாதவிடத்து எதிர்கால மோதலுக்கான தூண்டுதல் புள்ளிகளாக இவைகள் உருமாறும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் உருவாக்கிய அதியுயர் பாதுகாப்பு வலயம் (அ.உ.பா.வ.) பொதுமக்கள் தமது காணிகளை இழப்பதற்கும், இடம்பெயர்ந்து வாழ்வதற்கும் வழிவகுத்துள்ளது.அ.உ.பா. வலய நடைமுறை காரணமாக காணிகளை இழந்து இடம்பெயர்ந்தவர்களில் அதிகமானவர்கள் தமிழ்மக்களாகும்.

உள்நாட்டு யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள காணிப்பரப்பில் அண்ணளவாக 41 சதுர கிலோமீற்றர் பரப்பு இவ் அ.உ.பா. வலயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிலர் அவர்களுடைய முதுசக்காணிகளை இராணுவத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இது யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான அனுபவமாகும்.

1990 ஆம் ஆண்டு வரை வடமாகாணத்தில் வசித்து வந்த முஸ்லீம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் அங்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதனால் தமது காணிகளை இழந்துள்ளனர்.

காணிக்கொள்கையின் அவசியம்

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மீள்வருகை தொடர்பான அரசாங்கத்தின் காணிக் கொள்கையினையும், இடம் பெயர்ந்தவர்களின் காணி ஆவணங்கள் மற்றும் காணி உரிமை மற்றும் பயனாளிகளின் உரிமை என்பவற்றிலுள்ள பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2011 ஆம் ஆண்டு ஆடி மாதம் முன்மொழியப்பட்ட ‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாண காணிகளின் நிர்வாகம் பற்றிய செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்” என்ற தலைப்பினையுடைய திட்டத்தினை ஆணைக்குழு வரவேற்றுள்ளது.

பொருத்தமான எதிர்கால தேசிய காணி கொள்கை வழிகாட்டல்களை முன்மொழிவதற்காக தேசிய காணி ஆணைக்குழு ஒன்றினை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்.காணிக் கொள்கைகளை உருவாக்குவதில் முன்மொழியப்பட்ட தேசியக் காணி ஆணைக்குழுவானது சமமான அரச காணிப் பங்கீட்டுக்கான வழிகாட்டல்களை உள்ளடக்க வேண்டும்.

இது பதின்மூன்றாவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஒரு தேவையாகவும் உள்ளது. இதற்கான ஒரு சட்டமூலம் / வரைவுச்சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என்பதனை ஆணைக்குழு கவலையுடன் குறிப்பிட்டுள்ளது.

அரச காணிக் கொள்கையானது ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் சனத்தொகை பரம்பலில் தலைகீழ் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருவியாக இருக்கக்கூடாது. மகாணங்களுக்கிடையிலான நீர்ப்பாசன அல்லது காணித் தீர்வுத் திட்டங்கள் விடயத்தில், மாகாண காணி வழங்கலானது இலங்கை அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டது போன்று தொடர வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,607 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>