பிரான்ஸின் சிவில் சேவை

கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாகப் பிரான்ஸில் சிவில் சேவை செயற்பட்டு வருகின்றது. சிவில் சேவையாளர்களிடம் நாட்டுப்பற்றும், கடமையுணர்வும் ஆரம்பகாலம் தொட்டே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பிரான்ஸிய சிவில் சேவையாளர்கள் தேசிய நலனை மதிப்பவர்களாகவும், பேணுபவர்களாகவும் வளர்க்கப்பட்டார்கள். இவ்வகஉணர்வு இவர்களை ஒரு சக்திமிக்க, நாட்டுக்;காக உழைக்கக் கூடிய ஒரு மக்கள் சக்தியாகத் தோற்றுவித்தது. பிரான்ஸின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு எல்லாம் முகம் கொடுத்து பொது நிர்வாகம் சீர்கெடாமல் பாதுகாத்து வந்துள்ளார்கள். இப்பண்புகள் சிவில் சேவையை ஒரு கௌரவமான தொழிலாக மக்கள் மதிக்கும் அளவுக்கு உயர்த்தியிருந்தது. இது சிவில் சேவைக்கான போட்டியை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கலாயிற்று. போட்டி அதிகரிக்க பிரான்ஸிய சிவில் சேவையில் மிகவும் திறமை உள்ளவர்களைத் தெரிந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கலாயிற்று. இதனால் சிவில் சேவையில் ஆட்களைச் சேர்ப்பதற்காகத் திறமையை ஓர் அளவு கோலாகப் பயன்படுத்தினார்கள். நாட்டுப்பற்று, கடமையுணர்வு, தேசிய நலன் என்பவைகளைக் கருத்தில் எடுத்துச் செயற்படக்கூடிய ஊழியர்களைத் தெரிவு செய்து, சிவில் சேவையை உறுதியான ஓர் அமைப்பாகப் பிரான்ஸ் தோற்றுவித்துக் கொண்டது. இவ்அத்தியாயம் பிரான்ஸ்சின் சிவில் சேவை வகைகள், அமைப்பு, ஆட்சேர்ப்பு, Ecole National Administration தொடர்பாகப் பரிசீலனை செய்வதுடன், சிவில் சேவை தொடர்பான சமகால சிந்தனைகளையும் பரிசீலனை செய்கின்றது.

சிவில் சேவைப் பிரிவுகள்

பிரான்ஸிய சிவில் சேவையைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  • அரச சிவில் சேவை
  • நீதிச் சேவை
  • பொது வைத்தியசாலை சிவில் சேவை
  • உள்ளூராட்சி சிவில் சேவை
  • இராஜதந்திர சேவை
  • பாரிஸ் பொலிஸ் சேவை
  • நிதிப்பரிசோதனைச் சேவை
  • கணக்காளர் சேவை

என்பவைகள் உள்ளடங்குகின்றன. இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறிய தொகையினராவர். உதாரணமாகப் பாரிஸ் பொலிஸ் சேவையில், ஏறக்குறைய 600 அங்கத்தவர்களும், அரச சிவில் சேவையில் ஏறக்குறைய 300க்குக் குறைந்தவர்களும் உள்ளனர்.

நடைமுறையில் தற்காலிகமாகவே உயர்நிலை நிர்வாகப் பதவிகளில் உத்தியோகத்தர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இவர்களின் ஊதியம் தனியார் துறைகளில் இதே பதவிகளில் உள்ளவர்களது ஊதியத்தை விடக் குறைவானதாகும். இதனால் சிவில் சேவையை விட்டு நீங்கிக் கைத்தொழிற்சாலைகளில் இணைந்து கொள்கின்றார்கள். இந்த நடைமுறை பின்னர் தடைசெய்யப்பட்டிருந்தது.

ஆனாலும், இவர்கள் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாகக் காணப்படுகின்றார்கள். இவர்களது செல்வாக்கு இவர்கள் ஆற்றுகின்ற நிர்வாகச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பொறுத்துக் காணப்படும். அமைச்சரவை அல்லது அமைச்சர்களின் நெறியாளர்களாக இவர்கள் பணிபுரிகின்ற போது உருவாகும் ஆளுமை இச் செல்வாக்குக்குக் காரணமாகின்றது. இத்தற்காலிகமான செல்வாக்கைப் பயன்படுத்தி இவர்கள் அரசியலில் அல்லது பொது வாழ்க்கையில் நகர்ந்து விடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

 சிவில் சேவை அமைப்பு

பிரான்ஸின் சிவில் சேவை அமைப்பைக் கிடையாக (Horizontally) நான்காக வகைப்படுத்தலாம். அவையாவன: A,B,C,D என்பனவாகும். A இன் செயற்பாடானது கொள்கை உருவாக்கம், நெறியாள்கை என்பனவாகும். இவர்கள் உயர்வகுப்பு உத்தியோகத்தர்களாகக் காணப்பட்டார்கள். இவர்கள் ஏறக்குறைய 20 % வீதத்தினராவார்.

B பிரிவில் 30 % உயர் உத்தியோகத்தர்களும், B பிரிவில் 25 % உத்தியோகத்தர்களும் D பிரிவில் 15 % உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் சிவில் சேவையாளர்கள் தொழில் வகையைப் பொறுத்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அமைச்சுக்குக் கீழும் பணிக்கமர்த்தப்படுகின்றார்கள். ஓவ்வொரு குழுவின் பணியாளர்களின் பதவியும் படிநிலை (Hierarchy) ஒழுங்கமைப்பிற்கு ஏற்ப ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.

A பிரிவு சிவில் சேவையாளர்கள்:

A பிரிவு சிவில் சேவையாளர்களிடையே மேலும் பல பிரிவுகள் காணப்படுகின்றன. A பிரிவு பணியாளர்களில் 2 % 3 பேர் பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும, சிரேஷ்ட இரண்டாம் தரப் பாடசாலை ஆசிரியர்களாகவும் காணப்படுகின்றனர். A பிரிவிலுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேலும் மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றனர்.

  • இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள்: இவர்கள் அமெரிக்க இணைப் பேராசிரியர்களுக்குச் சமமானவர்களாவர்.
  • முதலாம் வகுப்பு ஆசிரியர்கள்: இவர்கள் முழுநிலைப் பேராசிரியர்களாவர்.
  • தனிச்சிறப்பு வாய்ந்த வகுப்பு: இவர்கள் தாம் சார்ந்த கல்வித் துறையில் முதன்மையான முழுநிலைப் பேராசிரியர்களாவர்.

A பிரிவிலுள்ள அரச தொழில் நுட்பப் பிரிவு:

இப் பிரிவு பொறியியலாளர்களைக் கொண்டதாகும். பொதுவாக இவர்கள் Ecole Polytechnique ஊடாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். நடைமுறையில் இவர்கள் தூய்மையான தொழில் நுட்பவியலாளர்களாகப் பணியாற்றாமல் நிர்வாகிகளாகவே பணியாற்றுகின்றார்கள். இப் பிரிவுக்குள் சிறப்பான மூன்று தொழில் நுட்பப் பகுதிகள் காணப்படுகின்றன.

  •  தெருக்கள் பாலங்கள் பிரிவு
  •  கனியவளங்கள் பிரிவு
  •  தொலைத்தொடர்புப் பிரிவு

A பிரிவிலுள்ள அரச நிர்வாகப் பிரிவு

இப் பிரிவு நிர்வாகிகளைக் கொண்டதாகும். பொதுவாக இவர்கள் Ecole Nationale de Administration ஊடாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். இராஜதந்திரிகள், திணைக்கள உயர் நிர்வாக உத்தியோகத்தர்கள், பாரிஸ் பொலிஸ் தலைமையதிகாரி, கணக்காளர்கள், வரிவசூலிப்போர், சுங்க அதிகாரிகள் போன்ற நிர்வாக நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் யாவரும் A பிரிவில் உள்ள பொதுவான பணியாளர்களாகக் (Generalist Corps) கருதப்படுகின்றதுடன், பல அமைச்சுக்களின் கீழ்ப் பணிபுரிகின்ற பொதுவான பணியாளர்களுமாவர்.

சேவை

பிரான்ஸின் சிவில் சேவையானது கிடைமட்ட (Horizontal) ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்டு நிலைக்குத்தாக (Vertical) ஒழுங்கமைக்கப்படுகிறது. அதாவது சிவில் சேவை ஒழுங்கமைப்பை நிலைக்குத்து அமைப்பினூடாக விளங்கிக் கொள்வதே சிறப்பானதாகும். இங்கு A பிரிவு, உயர் நிர்வாக அலகாகக் காணப்படும். இது எல்லாப் பொதுச் சேவைகளுக்கும் பொறுப்பானதாகும். பெருந்தெருக்கள் பொதுப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நகர உள்கட்டுமானம், குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம், நகரத்திட்டமிடல் யாவற்றுக்கும் பொறுப்பானதாகும். அடுத்த நிலைகளில் B C D பிரிவினர்கள் காணப்படுவார்கள். கொள்கை உருவாக்கம், உயர் முகாமைத்துவம் என்பவற்றுக்கு ஒன்றுபட்டுப் பணியாற்றுவது அவசியம் என்பது உணரப்படடுள்ளது.

சிவில் சேவையாளர்கள் தங்களுடைய நியமனத்திற்குரிய இலக்கினை அடைவற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். மேலும், சிவில் சேவையாளர்கள் தமது நாளாந்தச் செயற்பாடு தொடர்பாக நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளலாம். நீதி மன்றத்தால் குற்றவாளி என ஒரு தடவை தீர்ப்பு வழங்கப்பட்ட எவரும் சிவில் சேவையாளராக இருக்க முடியாது. சிவில் சேவையாளர்கள் பிரான்ஸிய அரசாங்கம் அல்லது பொது நிறுவனங்கள் தொடர்பாக உத்தியோக பூர்வமான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் தனிப்பட்ட கருத்துக்கள் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உயர் நிர்வாகப் பதவிகளில் இருப்போருக்கு இது மிகவும் அவசியமாகும். உதாரணமாக அரசுத் தூதுவர்கள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகத் தனிப்பட்ட கருத்துக்கள் எதனையும் கூறக்கூடாது. சிவில் சேவையாளர்கள் தமது தனிப்பட்ட நன்மைக்காகப் பகிரங்கமாக அல்லது இரகசியமாக எவ்வகையான தகவல்களையும் வெளியிடக் கூடாது. சிவில் சேவையாளர்கள் மதம், அரசியல் கருத்துக்கள், பிறப்பு, பால் தொடர்பாகக் கருத்துக் கூறுவதிலிருந்து இயல்பாக விலகியிருப்பதோடு, நடுவுநிலை வகிக்கவும் வேண்டும்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கல்விச் சுதந்திரம் சட்டப்படியான அடிப்படைக் கொள்கையாக அரசியல் யாப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் முழுமையான சுதந்திரமுடையவர்கள். இவர்கள் தமது கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சிச் செயற்பாட்டிற்காக முழுமையான பேச்சுச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். ஆனாலும், பல்கலைக்கழகச் சம்பிரதாயங்கள், தூர நோக்கு, சகிப்புத் தன்மைத் தத்துவம் போன்றவற்றுக்குத் தமது கௌரவத்தை எப்போதும் வழங்கவேண்டும்.

சிவில் சேவையாளர்கள் தமது மேலதிகாரிகளால் வழங்கப்படும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். மேலதிகாரிகள் சிவில் சேவையாளர்களது பதவிநிலைக்கும் அவர்களால் ஆற்றப்படும் வேலைக்கும் பொதுவாகப் பொறுப்பானவர்களாவர். சில சிவில் சேவைப் பிரிவுகள் தமது சிவில் சேவையாளர்களின் முகாமைத்துவம், மதிப்பீடு, ஒழுக்கம் தொடர்பாக விசேட விதிகளைப் பின்பற்றுகின்றன. உதாரணமாகப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குழுவினால் மதிப்பீடு செய்யப்படுகின்றார்கள்.

ஆட்சேர்ப்பு

கோட்பாட்டு ரீதியில், எல்லா மட்டங்களிலுமான, எல்லா வகையான பதவிகளுக்கும் திறந்த போட்டிப்பரீட்சை நடாத்தப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் A, B வகுப்பு சேவையாளர்களைச் சேர்ப்பதற்கே பொதுவாக பரீட்சை நடாத்தப்படுகின்றது. C,D வகுப்பு சேவையாளர்களுக் கிடையில் அதிகம் போட்டி இல்லாததால், பரீட்சை முதன்மைப்படுத்தப்படுவதில்லை. அதே போலத் தற்காலிக ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் பரீட்சை நடைபெறுவதில்லை.

போட்டிப்பரீட்சைகளில் Grandes Corps நடாத்திய பரீட்சை, தரம் கூடியதாகக் காணப்படுகிறது. இப்பரீட்சைக்குத் தோற்றியவர்கள் சிறந்த கல்விமான்கள் என்ற ஒரு நம்பிக்கை காணப்பட்டிருந்தது. இதனால் Grandes Corps இன் தரம் சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டிருந்தது. இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் சிவில் சேவையில் மாத்திரமன்றி, பாரிய கைத்தொழில் நிறுவனங்களிலும் சிறப்பான பதவிகளைப் பெறமுடிந்தது.

Grandes Corps பரீட்சையில் சித்தியடைவதற்காகப் பட்டப்படிப்பின் பின்னர் மாணவர்கள் Ecole de Polytechnique என்ற அமைப்பில் இணைந்து கற்றார்கள். இந்த அமைப்பில் பயிற்றுவித்தவரும், பரீட்சிப்பவரும் ஒருவராக இருந்தார். இதனால், மாணவர்கள் பரீட்சைக்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொள்வது இலகுவாயிற்று. இவ்வறிவைப் பயன்படுத்தி மாணவர்கள் Grandes Corps பரீட்சையில் சித்தியடைவது இலகுவாயிற்று. இப்பரீட்சை மிகக் கடினமானதாகக் காணப்பட்டதால்,கல்வியில் மிக உயர்ந்த தரத்தைப் பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாதாரண தர மக்கள் இப்பரீட்சையில் தேர்ச்சி பெறுவது மிகக் கடினமாக இருந்தது. இதனால் சிவில் சேவையில் பணியாற்ற வந்தவர்கள் உயர் மத்தியதர வர்க்கத்தினராகவே காணப்பட்டனர். பாரிஸ் நகரத்தில் வாழ்பவர்கள் மாத்திரமே உயர் பதவிகளை ஆக்கிரமித்திருந்தனர். உயர் பதவியை ஏனைய மக்களும் பெறுவதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற உணர்வு, சிந்தனை உருவாகியது. உயர் நிர்வாகப் பதவிகளுக்கு ஆட்சேர்க்கும் பரீட்சையானது “பொதுப்பரீட்சையாக” அமைய வேண்டும் என்ற கருத்து உருவாகியது. இதன் வெளிப்பாடாக 1946ஆம் ஆண்டு Ecole National Administration என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

Ecole National Administration

1945ஆம் ஆண்டு Ecole National Administration (ENA) என்ற அமைப்புப் பிரான்ஸில் தோற்றுவிக்கப்பட்டது. இவ் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் சிவில் சேவையில் ஒருவர் நுழைவதற்கு இந்நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இன்னொhரு வகையில் கூறின் நிர்வாகக்கல்வியைப் போதிப்பது, சிவில்சேவையில் ஆட்களைச் சேர்த்துக் கொள்வது, பயிற்சியளிப்பது போன்றவற்றை நிறுவனப்படுத்தி வழங்குவதற்கு Ecole National Administration என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த அமைப்பு சிவில் சேவையாளர்களை உருவாக்குவதற்குப் பட்டதாரிகளுக்கிடையில் மிக உயர்ந்த போட்டிப்பரீட்சைகளை நடாத்துகின்றது. இப்பரீட்சையில் தோற்றுவதற்காக அநேக மாணவர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்னர் பாரிஸ் நிறுவனத்தில் உள்ள அரசியல் கல்வித்துறையில் அல்லது பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டத்துறையில் விசேட கற்கை நெறிகளைக் கற்றனர். ENA இல் சேரும் மாணவர்கள் இந்நிறுவனத்தில் தமது இரண்டு வருடக் கல்வியை முடித்த பின்னர் ஒரு போட்டிப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்தப்படுவார்கள். இப்பரீட்சைப் பெறுபேறு ஒருவர் நிர்வாக சேவையில் நுழைவதற்கான எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். உயர்ந்த புள்ளிகளைப் பெறுபவர்களின் பெயர்கள் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, சிரேஷ்ட நிர்வாகிகளாக நியமிக்கப்படுவார்கள். இவர்களில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் அமைச்சு, திணைக்கள சிவில் சேவையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

ENA இல் நுழையும் மாணவர்கள் கற்கும் கல்வி, கோட்பாடுகளை மையமாகக் கொண்டிருப்பதில்லை. மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி வழங்கப்படும். இரண்டாம் வருடத்தில் பொதுநிர்வாகம், பொருளியல் நிர்வாகம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். நிர்வாக முறைமைகள் குறிப்பாக சட்ட, நிதி விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்படும். மாணவர்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பயிற்சியளிக்கப்படும். இறுதியில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான விரிவுரைகள் நடத்தப்படும். பின்னர் பொது தனியார் நிறுவனங்களில் சிறிய பயிற்சிக்காக அனுப்பப்படுவார்கள். இறுதியில் எல்லா மாணவர்களுக்கும் சர்வதேச மொழி போதிக்கப்படும்.

சிவில் சேவையாளர்களுக்கான நிபந்தனைகள் 1945ஆம் ஆண்டு சட்டக் கோவையில் இணைக்கப்பட்டுள்ளன. இச்சட்டக்கோவை 1959 இல் திருத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு சம்பள அமைப்புப் புனரமைக்கப்பட்டது. இன்று நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மீண்டும் சம்பள அமைப்புப் புனரமைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் சம்பள வேற்றுமை சிறியளவில் தான் காணப்படுகின்றது. வேறுபட்ட அமைச்சுக்கள் பிரிவுகள், Grandes Corps என்பவைகள் தமது சொந்த விருப்பத்துக்கு ஏற்ப அடிப்படை விதிகளைத் திருத்தியும், புதியவற்றைச் சேர்த்தும் வைத்துள்ளன. பொதுவாக எல்லா நிரந்தர சிவில் சேவையாளர்களும், பாதுகாப்பு, ஓய்வூதியம் பெறும் உரித்துடையவர்களாக்கப்பட்டுள்ளனர். தேவைக்கு அதிகமான சிவில் சேவையாளர்கள் சட்டப்பிரகடனம் ஒன்றின்படி நட்டஈட்டுடன் சேவையில் இருந்து நீக்கப்படலாம். ஓய்வூதியம் பெறும் வயது, பதவிகளைப் பொறுத்து வேறுபடலாம். குறிப்பிட்ட வருடம் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெறலாம். ஆகக் குறைந்தது 15 வருடங்கள் சேவையாற்ற வேண்டும். 40 வருடங்கள்; சேவையாற்றினால் ஓய்வூதியம் பெறும் போது கிடைக்கும் சம்பளத்தில் 2 /3 பங்கு சன்மானமாக வழங்கப்படும். இதை விட எல்லா ஓய்வூதியக்காரர்களும் குறைந்தது ஒரு மாதக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்களாவர்.

எல்லாச் சிவில் சேவையாளர்களுக்கும் சில குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. நிர்வாக அதிகாரப் படிநிலை அமைப்பில் உள்ள உயர் அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களைத் தமக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களுக்குட்பட்டே செயற்படுத்த வேண்டும். அதிகாரிகள்; தமது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்வார்களேயானால் பிரஜைகள் நிர்வாக நியாய சபையில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். சிவில் சேவையாளர்கள் தமது கடமைகளைத் திருப்தியாகச் செய்யவில்லை என அவர்களது மேலதிகாரிகள் கருதுவார்களேயானால் அவர்கள் தமது வருடாந்த முன்னேற்ற அறிக்கையில் இதனைக் குறிப்பிடலாம். இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். விசேட ஒழுக்காற்றுக் குழு எல்லாப் பிரச்சினைகளையும் பரிசீலனை செய்யலாம். ஆனால் சிவில் சேவையாளர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் எதேச்சதிகாரமாக எடுக்க முடியாது. எதேச்சதிகாரமான முடிவு எடுக்கப்பட்டால், சிவில் சேவையாளர்கள் தேசிய சபையில் வழக்குத் தொடர முடியும். சிவில் சேவையாளர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் எச்சரிக்கப்படலாம். அல்லது இடைநிறுத்தப்படலாம் அல்லது நிரந்தரமாகப் பதவியில் இருந்து நீக்கப்படலாம்.

ENA இன் நோக்கம், முறைமைகள், பெறுபேறுகள் தொடர்பாக இவ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் விமர்சிக்கப்பட்டு வந்தது. இதனால் 1971ஆம் ஆண்டில் இருந்து பல சீர்திருத்தங்களை இந்த அமைப்புச் செய்யவேண்டி ஏற்பட்டது. இவ் அமைப்பின் மூல நோக்கம் பயிற்சி வழங்குவது மட்டுமல்ல, உயர் சிவில் சேவைக்கான ஜனநாயக ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதுமாகும். இதன் மூலம் ஆட்சேர்ப்பில் இதுவரை நிலவி வந்த உயர்வர்க்கத்தவரை மட்டும் சேர்த்துக் கொள்ளும் பண்பை இல்லாமல் செய்வதாகும். நுNயு ENA இன் இரண்டு வருடச் செயற்பாட்டில் உயர் பதவிகளுக்குப் பொருத்தமான உயர் திறன் படைத்த உயர் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்துள்ளது.

ENA யும் அரசியல்வாதிகளும்

சிவில் சேவையாளர்கள் இலகுவாக அரசியலில் நுழைவதற்கு ஏற்ற வகையில் பிரான்சில் சட்டம் இயற்றப்பட்டது. சிவில் சேவையாளர்கள் அரசியல் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டால் அல்லது நியமனம் செய்யப்பட்டால் தமது சிவில் சேவைப் பதவிகளை இராஜினாமா செய்யத் தேவையில்லை. பதிலாக, அவர்கள் தற்காலிக விடுமுறையில் செல்லமுடியும். அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்படாவிட்டால் அல்லது நியமனம் செய்யப்படாவிட்டால் மீண்டும் சிவில் சேவையில் இணைவற்குக் கோரமுடியம். மேலும் ENA பட்டதாரிகள் அமைச்சர்களாலும், அரசியல்வாதிகளாலும் உதவியாளர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இது இவர்கள் இலகுவாக அரசியலுக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.

ENA பற்றிய விமர்சனம்:

ENA நடைமுறைப்படுத்திய போட்டிப் பரீட்சை, உயர் நிர்வாகிகளைத் தெரிவு செய்ய உதவியாக இருந்தாலும் இது தொடர்பான விமர்சனம் தொடரவே செய்தது. அவற்றுள் சில விமர்சனம் யதார்த்தமானவையாகவும், முதன்மை யானவையாகவும் காணப்பட்டன.

ENA பட்டதாரிகள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்குத் தயார்படுத்தப்பட்டவர்களல்லர். உயர் நிர்வாகப் பதவிகளுக்குச் செல்லும் சிவில் சேவையாளர்கள் குறிப்பிட்ட விடயத்தில் பாண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும். எனவே குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கான பட்டதாரிகளை  ENA உருவாக்கவில்லை. உயர் நிர்வாகப் பதவிகளுக்கு இது அவசியமான தேவையாகும். ஆட்சேர்ப்புப் பூரணமாகத் திறமை அடிப்படையிலேயே நடைபெறுவதால் இது உயர் புத்திஜீவித்தன்மையை மட்டும் காட்டுகின்ற அமைப்பாகக் காணப்படும். இதனால் கீழ்மட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் ஒழுக்கத்தைக் கைவிடும் நிலை தோற்றம் பெற்று விடுகின்றது. ஏனெனில் அமைச்சர்களுக்குக் கீழ் நிலையில் இருக்கும் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகளுக்கு இவர்கள் பதவி உயர்த்தப்பட முடியாத நிலை உருவாகின்றது. இது சிவில் சேவையில் திறமைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைகிறது.

அடுத்ததாக Grandes Corps அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படும் ஆட்சேர்ப்பு முறை முற்றிலும் வேறான ஒரு முறையாக உள்ளது. இது சிவில் சேவையாளர்களிடையே அதிக வேறுபாடுகளைத் தோற்றுவித்துவிடுகின்றது. Grandes Corps அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் முறைமை ஏனைய சிவில் சேவையாளர்களைப் பணிக்கு சேர்க்கும் முறையில் இருந்து வேறுபடுகின்றமையினால், இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்பாடல் பலவீனமடைந்து விடுகின்றது. இது பொது நிர்வாகம் பலவீனம் அடைவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

இவற்றை விட சிவில் சேவையாளர்கள் பாரிஸ் மத்தியதர வர்க்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பினைப் பாரிஸ் அரசியல் நிறுவன கற்கைப்பீடமும், சட்டபீடமும் வழங்கிவருகின்றன. பெரும்பான்மையான மாணவர்கள் பாரிஸ் சமூகத்தில் இருந்து கல்வி கற்க வருகின்றமையினால் மத்தியதர வர்க்க சிவில் சேவையாளர்களையே நுNயு தோற்றுவித்துவிடுகின்றது.

பிரான்ஸிய அரச சிவில் சேவையின் அநேக அந்தஸ்துப் பதவிகளை ( A பிரிவு) அடைவற்கான சட்ட ரீதியாக அனுமதி பெற்ற அரைகுறைத் தனியுடைமையினை ENA பெற்றிருந்தது. இவ்வாறான ஒரு நிலையினை Ecole Polytechnique பெற்றிருந்தது. இதன் மூலம் இரண்டு பிரதான நன்மைகளைப் பெற்றுக் கொண்டது.ஒன்று உயர் நிர்வாகப் பதவிகளில் தனியுடைமையைப் பெறல் மற்றையது, கைத்தொழில் துறைக்குள்ளும்,அரசியலுக்குள்ளும் இலகுவாக நுழைதல்.

இன்று ENA ஐரோப்பிய யூனியனின் அல்லது ஏனைய நிதி வழங்குனர்களின் நிதி உதவியுடன் சர்வதேச நுட்ப உதவித் திட்டத்தில் பங்குபற்றுகின்றது. இதன் மூலம் புகழையும், அந்தஸ்தையும் பெற்றுவருகின்றது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,615 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>