அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்

அரசு என்பது அரசியலமைப்புடைய சமுதாயமாகும். நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம்,இறைமை ஆகியன அரசிற்கு அவசியமானதாகும். இது பற்றிக் கார்ணர் கூறும் போது “எண்ணிக்கையில் அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள மக்கள் சமுதாயமாகும். இது வெளிக்கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரம், குறிப்பிட்ட நிரந்தரமான குறிப்பிட்ட நிலப்பரப்பு, அரசாங்கம் என்பவைகளைக் கொண்டிருக்கும்” எனக் கூறுகின்றார். புருஸ்டர் (Brewster) அரசு என்பது “இறைமையுடைய அரசாங்கத்தின் நிலப்பரப்பில் வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குழுவாகும்”எனக் கூறுகின்றார். மக்ஐவர் என்பவர் “அரசாங்கம் சட்டப்படி நடந்து கொள்ளும் மக்களையும், தண்டனை வழங்கும் வல்லமையுள்ள அரசாங்கத்தினையும், குறிப்பிட்ட ஆட்சிப் பிரதேசத்தினையும் கொண்டதே அரசு” எனக் கூறுகின்றார். லஸ்கி “குறிப்பிட்ட ஆட்சிப் பிரதேசத்தில் ஏனைய நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, அரசாங்கம், மக்கள் எனப் பிரிக்கப்பட்டு நிரந்தரமாக அமைந்துள்ள சமுதாயமே அரசு” எனக் கூறுகின்றார். இவ்வரைவிலக்கணங்களில் கார்ணர், லஸ்கி, ஆகியோர்களின் வரைவிலக்கணங்கள் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

தேசம்:

தேசம் என்பது மானிடத் தொகுதியை குறித்து நிற்கின்றது. இம்மானிடத் தொகுதி வெவ்வேறுபட்ட இனக்குழுக்களைக் கொண்டதாகும் பொதுவான சிந்தனைகளையும், சுய உணர்வினையும் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுவார்கள். தமது உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த பொது மொழியினைப் பயன்படுத்துபவர்களாகவும் காணப்படுவர். தனியரசைத் தோற்றுவிப்பதற்கான பொது விருப்பத்தினையும் சிந்தனையினையும் உணர்வுபூர்வமாக கொண்டவர்களாக இருப்பர். ஏர்னெஸ்ர் ரெனன் (Ernest Renan) என்பவர். “மக்கள் தாம் புரிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வின் மூலம் ஒன்றாக கட்டுப்பட்டு இருப்பதே தேசமாகும். ஒரே மொழியினைப் பேசுகின்றவர்களாக அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக மக்கள் இருக்காவிட்டாலும் குறைந்த பட்சம் கடந்த காலப் பொதுச் சிந்தனைகளை நிறைவேற்றியவர்களாகவும் தங்களுடைய எதிர்கால சிந்தனைகளை அல்லது விருப்பத்தினை நிறைவேற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும்”என்கிறார். உள, ஆத்மார்த்த, அம்சங்கள் மக்களை ஒன்றாக கட்டி வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேசப்பண்பிற்கான (Nation Hood) உணர்வு, பொதுவான வரலாறு, ஒன்றாக கூடிவாழ்வதற்கான விருப்பம் என்பவற்றின் மூலம் ஆத்மார்த்தமாக தேசம் என்ற சிந்தனை விருத்தியடைகின்றது.

அரசியல் விஞ்ஞானத்தில் தேசம். அரசு. தேசிய இனம் போன்ற கலைச் சொற்களுக்கு தனித்துவமான கருத்துக்களுண்டு. தேசம் என்பது “பொது மரபிலிருந்து தோன்றிய இனமக்களைக் குறிக்கப் பயன்படும் சொற்பதம் தேசம்” ஆகும். கால்வோ (Calvo) தனது சர்வதேசச் சட்டம் என்ற நூலில் தேசம் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதில் இவர் தேசம் என்பது பிறப்பினாலும். மரபினாலும். பொது மொழியினாலும் ஒன்றுபட்ட மக்கள் குழுவே தேசம்” எனக் கூறுகின்றார். தற்காலத்தில் தேசம் ஒன்றிற்கு பொது மொழியோ, பொது மரபோ, சமயமோ வலியுறுத்தப்படுவதில்லை. மக்களிடம் மன ஒற்றுமை, ஆத்மநேயம், ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, ஒரே நாட்டவர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

இனத்துவம்

இனத்துவம் இன அடையாளங்கள் என்ற பதங்கள் சமகால சமூக பொருளாதார விவாதிக்கப்படும் பிரதான பதங்களாகும். ஆனால், இப்பதங்களை வரைவிலக்கணப்படுத்துபவர்கள் வேறுபட்ட தளங்களிலிருந்து வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றார்கள். கலைச்சொல் அகராதிகள் இனம், தேசம், இனத்துவம் என்பவைகளுக்கான ஒரேமாதிரியான விளக்கங்களை ஒன்றுக்கொன்று மாறிப் பிரயோகிக்கின்றன. ஆயினும் நவீன ஆராட்சிகள் சில இனத்துவம்,தேசியவாதம் ஆகிய இரண்டு பதங்களையும் வேறுபடுத்திக் காட்ட முயற்சித்துள்ளதுடன், தனித்துவத்துடன் இரண்டு பதங்களுக்கும் வரைவிலக்கணம் கொடுக்க முயற்சித்துள்ளனர். இனத்துவம், இன அடையாளம் என்ற இரண்டு பதங்களும், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய புலமையாளர்கள் தேசிய அரசுகளின் சிறுபான்மைச் சமுகங்களின் சமூக-அரசியல் நடத்தைகளை விவாதிப்பதற்கு 1990 களின் பின்னர் பயன்படுத்தியிருந்தனர்.

சமூக விஞ்ஞான அகராதி (Social Science Encyclopedia) இனத்துவம் என்பது “சமூக ஒழுங்கமைப்பின் அடிப்படை வகைப்பாடாகும். பொதுவான வரலாற்றுத் தோன்றல்கள்” என்ற உணர்வின் அடிப்படையில் சமூக அங்கத்;துவத்தினை பெற்றுக் கொள்கின்றார்கள். பொதுவான வரலாற்று உணர்வு என்பது கலாசாரம், சமயம், மொழி, போன்றவற்றை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் ஏற்படுவதாகும்” எனக் கூறுகின்றது. வேறு சிலர் இனத்துவம் என்பது “கலாசாரம் ரீதியான ஏனைய சமூகக் குழுக்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றோம் எனத் தம்மைத் தாமே கருதும் மக்கள் கூட்டத்தினருக்கிடையிலான சமூக உறவே இனத்துவமாகும்” எனக் கூறுகின்றார்கள்.

தேசியம்:

தேசியம் என்பது உள உணர்வு, அல்லது சமூக நடத்தை எனலாம். சமுதாயத்தின் வரலாற்று அபிவிருத்தியினூடகத் தேசியம் அபிவிருத்தியடைந்து வருகின்றது. தேசியத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பல இயல்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொது வம்சாவழி, மொழி, பழக்கவழக்கங்கள், மரபுகள், மதம், போன்றன தேசியத்தினை அடையாளப்படுத்துகின்றன. இவ்வியல்புகளின் மூலம் மக்கள் ஒரே விதமான சமூக, மத, அரசியல் நிறுவனமாக தம்மை பிரதிபலிக்கின்றார்கள். சமூகவியலாளர்களாகிய லூஇஸ் (Louis) என்பவர்“மக்கள் ஏதோவொரு பொதுவான வம்சாவழியினை நம்புகின்றவர்களாகவும், பொதுவான கலாசாரப் பண்புகளையும் இறைமையினையும் விரும்புகின்றவர்களாவும் அல்லது பாரிய அரசியல் அல்லது கலாசார செல்வாக்கிற்கு முகம் கொடுப்பவர்களாகவும் உள்ளதே தேசியம்” என்கின்றார்.

தேசியவாதத்தின் ஆரம்பம் என்பது மனிதன் தன் தேசம், தேசிய இனம் என்பவைகள் மீது கொண்டுள்ள உணர்வுப10ர்வமான விசுவாசத்துடன் ஆரம்பமாகின்றது. தேசம் ஒன்று தேசப்பற்றால் உந்தப்பட்டு அறிவுபூர்வமாக ஐக்கியமடைந்து தமது சுதந்திரத்திற்காகப் போராடியதன் விளைவே தேசிய அரசுகளின் தோற்றமாகும். தேசம் என்ற உளவியல் செயற்பாட்டுடனும் அரசு என்பதற்கான வரையரைகளுடனும் ஒன்றிணைந்து செல்கின்ற உளவியல் உணர்வாகும். ஆயினும் தேசியவாத உணர்வானது குறிப்பான வரலாற்று இயல்புகளினாலும் சிறப்பான சமூக கட்டுமானத்தினாலும் தீர்மானிக்கப்படுகின்றமையால் தேசிய அரசின் இறைமையின் மீது அழுத்தத்தினைக் கொடுக்கக்கூடியளவிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றது.

“மொழி, மரபு ஆகியவற்றினடிப்படையில் ஒன்றுபடுதலே” தேசியம் என லீ கொக் கூறுகின்றார். குறிப்பிட்ட இனம், சமயம், மொழி, மரபு போன்றவற்றினடிப்படையில் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஒன்றாகக் கூடி வாழ்வது தேசியத்திற்கு அவசியமாகும் அதாவது ஒரே மொழி, இனம், சமயத்தினைக் கொண்ட மக்கள் பண்பாடு, கலாசாரத்தினடிப்படையில் ஒன்றாகி, தாங்கள் அனைவரும் ஒன்று என்ற அக உணர்வினடிப்படையில் மன எழுச்சிக்குள்ளாவதே தேசம் எனலாம். பிரைஸ் என்பவர் “மொழி, இலக்கியம்,கருத்துக்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் ஒன்றிணைக்கப்பட்ட மக்கள் தொகுதியே தேசியம்” எனக் கூறுகின்றார்.

அரசும், சமூகமும்

சமூகத்திலிருந்து அரசினை வேறுபடுத்திக் காட்ட வேண்டியது அவசியமாகும். சமூகமும் மனிதர்களின் சங்கமாகும். சமூகம் மனிதர்களுக்கிடையில் உறவினைப் பேணுகின்ற நீண்ட அமைப்பாகும். மேலும், சிக்கலான மனிதக் குழுக்களையும், நிறுவனங்களையும் கொண்ட மானிடச் சங்கமாகும். அரசு சமூகத்தில் காணப்படும் ஒரு சங்கமாகும். ஆனால் சமூகமும், அரசும் ஒன்றல்ல சமூகத்தில் குடும்பம், சாதி, திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் போன்ற பல அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவைகள் சமூக வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகின்றவைகளாகும். இவைகளை விட வழக்காறுகள், போலித்தனங்கள், போட்டிகள் போன்ற சமூகப் பலங்களும் காணப்படுகின்றன. இவற்றை அரசுகள் பாதுகாக்கலாம் அல்லது புணரமைக்கலாம். ஆனால்,இவற்றில் சிலவற்றை அரசினால் உருவாக்க முடியாது. மக்ஐவர் என்பவர் “சமூகத்துடன் இணைந்திருக்கின்றதொரு கட்டமைப்பே அரசாகும். அரசு சமூகத்துடன் நெருங்கிய நட்புடையதாகும். ஆனால் அரசு சமூகத்தின் வடிவமல்ல” எனக் கூறுகின்றார். கிரேக்க தத்துவவியலாளர்கள் அரசிலிருந்து சமூகத்தினைப் பிரித்துப் பார்க்கவில்லை அரசியல் விஞ்ஞானத்தின் தந்தையாகிய அரிஸ்N;டாட்டல் சமூகத்தினையும், அரசினையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களாகிய பாசிஸ்ட்டுக்களும் சமூகத்திலிருந்து அரசினைப் பிரித்துப் பார்க்கவில்லை. மம்லினி (Mumblini) என்பவர் “எல்லாம் அரசிற்குள்ளே. அரசிற்கு வெளியே எதுவுமில்லை. அரசிற்கு எதிராக எதுவுமில்லை” எனக் கூறுகின்றார். சமூகத்தினையும் அரசினையும் பின்வருமாறு வேறுபடுத்திக் காட்டலாம்.

  1. எல்லா வகையான உறவுகளையும் பேண விரும்புகின்ற மனிதர்களை உள்ளடக்கியதே சமூகமாகும். மறுபக்கத்தில் அரசு ஒரு அரசியல் நிறுவனமாகும். இது அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் என அழைக்கப்படலாம்.
  2. சமூகம், அரசு என்ற பதத்தினை விட மிகவும் பரந்த பொருள் கொண்டது. அரசின் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவைகளாகும். சமூகம் என்பது பூகோளரீதியாகக் கூட இருக்கலாம். பார்க்கர் அப்ற்லி (Barker Aptly) என்பவர் “சமூகம் சேவை நோக்கிலான கூட்டுறவினாலானதாகும். இதன் “வலு” பொது விருப்பமாகும். இதன் முறைமை மிகவும் நெகிழ்வானதாகும் அரசு பொறிமுறை சார்ந்ததாகும். இதன் “வலு” பலமாகும். இதன் முறைமை மிகவும் இறுக்கமானதாகும் எனக் கூறுகின்றார்.
  3. அரசு ஒரு நோக்கத்தினை மட்டும் கொண்டிருக்கும். அது “அரசியல்” என்பது மட்டுமேயாகும். சமூகம் பல்வேறு நோக்கங்களை கொண்டிருக்கும். பொருளாதாரம், சமய நோக்கங்களை சமூகம் கொண்டிருக்கலாம். பார்க்கர் என்பவர் “அரசு உயர்ந்த, ஆனால் ஒரு நோக்கத்தினை மட்டும் கொண்டிருக்கும். சமூகம் பல எண்ணிக்கையிலான நோக்கங்களைக் கொண்டிருக்கும். சில நோக்கங்கள் பெரிதாகவும், சில சிறிதாகவும் இருக்கலாம். ஆனால் அதன் நோக்கங்கள் ஆழமாகவும்,அகன்றதாகவும் முழு வடிவம் பெற்றிருக்கும். எனக் கூறுகின்றார்.
  4. அரசு சட்டரீதியான நிறுவனங்களாகிய சட்டத்துறை,நிர்வாகத்துறை, நீதித்துறைகளைக் கொண்டியங்குகின்றது. மறுபக்கதிதல், சமூகம் பல நிறுவனங்களைத் தனக்குள்ளே சேர்த்து இயங்குகின்றது.
  5. அரசு கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கு சட்டரீதியான வலுவினைப் பெற்றுள்ளது. இது “இறைமை அதிகாரம்” என அழைக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் சமூகத்திற்கு இவ்வாறான அதிகாரங்கள் கிடையாது. கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கு சமூகத்தினால் முடியாது. ஆனால் நெறிமுறை விடயங்களை சமூகம் கூறலாம். இது அரசிற்கான கட்டளையாகிவிட முடியாது. சமூகம் கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கலாம்.
  6. சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டதாக அல்லது ஒழுங்கமைக்கப்படாததாக இருக்கலாம் ஆனால் அரசு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே அரசாங்கமாகும். அரசு, அரசாங்கம் என்ற முகவரூடாகவே தனது விருப்பத்தினை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்துகின்றது.

ஆரம்ப காலத்தில் வேட்டையாடுபவர்கள், மீன்பிடிப்பவர்கள், பழம் பொறுக்குபவர்கள், விறகு வெட்டிகள் போன்றவர்கள் சமூகக் குழுக்களாக காணப்பட்டனர். இக்குழுக்கள் அரசு பற்றி எதுமே அறிந்திருக்கவில்லை. இன்றும் இவ்வாறான சமூகக் குழுக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக எஸ்கிமொஸ் (Eskimos) இவர்களிடம் அங்கீகரிக்கப்படக்கூடிய அரசியல் நிறுவனங்கள் எதுவுமில்லை.

அரசும், சமூகமும் ஒத்த தன்மை கொண்டதாக இல்லாவிட்டாலும், சமூக ஒழுங்கிற்கான விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது அரசினையும் சமூகத்தினையும் ஒன்றாக்கி வைத்திருக்கின்றன. தனிநபர்கள் தங்கள் நடத்தைகளுக்காக சில ஒத்த விதிகளைக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் இணக்கமான அல்லது முரண்பாடற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட சமூக வாழ்க்கைக்குத் தேவையானதாகும். அரசு தனது அதிகாரத்தை பிரயோகிக்கா விட்டாலும், தனிநபர்கள் அரசிற்கு கீழ்ப்படிவார்கள். ஆகவே அரசினை மிகைப்படுத்திக் கூறவேண்டியதில்லை. சகிப்புத் தன்மையும், சகிப்பற்ற தன்மையும் சமூகத்தில் காணப்படும் பழக்க வழக்கங்களாகவும், மரபாகவும் உள்ளது. இவைகள் சமூகத்தின் நலன்கருதி மக்களிடமிருந்து வெளிப்படுகின்றது. உதாரணமாக தனிப்பட்ட பொது வாழ்க்கையினை தரமாகப் பேணுதல் என்பது சட்டத்திற்குப் பொருத்தமான விடயமல்ல. பார்க்கர் என்பவர் “சமூகம் தொண்டு செய்யும் கூட்டு நிறுவனமாகும். நன் நோக்கத்திற்காக தனது வலுவினை மிகவும் நெகிழ்ச்சியான முறையினைல் பிரயோகிக்கும். அரசு பொறிமுறை ரீதியான செயற்பாட்டினைக் கொண்டிருப்பதுடன், பலத்தினூடாகத் தனது வலுவினை மிகவும் இறுக்கமான முறையில், பிரயோகிக்கும்” எனக் கூறுகின்றார்.

அரசிற்கும், சமூகத்திற்கும் இடையில் தனித் தன்மையினை உருவாக்க வேண்டும். அரசின் கோட்பாட்டிற்கு சமூகம் அடிப்படையானதாகும். ஏனெனில் தனிப்பட்ட சுதந்திரத்தினை உணர்வதற்கு இது உதவுகின்றது. தனிநபர்களின் எல்லா வாழ்க்கையிலும் அரசு தலையீடு செய்து அரசும், சமூகமும் சமமானது என நியாயப்படுத்தப்படுகிறது. இது கொடுங்கோண்மை அரசினை உருவாக்கக் காரணமாகிவிடும். கிட்லர், முசோலினி காலத்தில் ஜேர்மனியிலும், இத்தாலியிலும், மற்றும் சோவியத் யூனியனிலும் அரசிற்கும் சமூகத்திற்கும் இடையிலான தனித்துவம் பேணப்படாததால் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்பட்டு மக்கள் துன்பப்பட வேண்டியேற்பட்டது.

மேற்கூறப்பட்ட விடயங்களிலிருந்து அரசு, சமூகம் ஆகிய இரண்டும் வேறுபட்ட இரண்டு விடயங்கள் என்பது தெளிவாகின்றது. குடும்பம்,சமய நிறுவனங்கள், சங்கங்கள் அரசின் விருப்பினை பூர்த்தி செய்பவைகளாக அல்லது பூர்த்தி செய்யாதவைகளாக இருக்கலாம். ஆனால் மரபுகள்,போட்டிகள், சம்பிரதாயங்கள் போன்ற “சமூக வலுவினை” அரசு பாதுகாக்கலாம். ஆனால் சிலவற்றை அரசு உருவாக்க முடியாது.

அரசு, அரசாங்கம் :

அரசு பொதுவாக அரசாங்கத்துடன் இணைந்து அடையாளப்படுத்தப்படுகின்றது. இத் தடுமாற்றம் பெரிய பிரித்தானியாவினை ஆட்சி செய்த சில கொடுங்கோண்மை ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பிரான்சிய மன்னன் 14ம் லூயிஸ் “நானே அரசு” என வெளிப்படையாகக் கூறியிருந்தான் கொப்ஸ்சும் அவரைப் போன்ற பல அரசியல் தத்துவவியலாளர்களும் அரசு,அரசாங்கம் என்ற இரண்டு பதங்களுக்கும் ஒரு பொருளில் விளக்கமளித்தனர். பன்மைவாதக் கோட்பாட்டாளராகிய டக்விற் (Dugwit) என்பவரும்கூட அரசு, அரசாங்கம் ஆகிய இரண்டு பதங்களுக்குமிடையில் வேறுபாட்டை உருவாக்கவில்லை.

ஆனால், அரசியல் விஞ்ஞான மாணவர்கள் அரசு, அரசாங்கம் ஆகிய இரண்டு பதங்களுக்கிடையிலான வேறுபாட்டினை பின்வரும் அடிப்படையில் எடுத்துக் கூறுகின்றனர்.

  1. அரசாங்கம் அரசினுடைய ஒரு உறுப்பாகும். அரசின் விருப்பங்களை வெளிப்படுத்தும் முகவரகமாக அரசாங்கம் இயங்குகின்றது. அரசாங்கம் அரசின் முகவரகமாகும். அரசினுடைய இருப்பிற்கான நோக்கங்களை வெளிப்படுத்துவது அரசாங்கமாகும். அரசாங்கம் கட்டாயப்படுத்தி அல்லது சுதந்திரமாக தனது உயர் அதிகாரத்தினை வெளிப்படுத்துவதில்லை. அரசு நிர்வாகத்தினை இலகுவாக மேற்கொள்வதற்கான பொறிமுறையே அரசாங்கமாகும். நோக்கம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதற்காக அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. 1885 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றம் அரசு, அரசாங்கம் தொடர்பாகப் பின்வருமாறு கூறியிருந்தது. “அரசு புலனறிவிற்கு அப்பாற்பட்ட கண்ணால் பார்க்க முடியாத, மாற்ற இயலாத கருத்தளவினாலானதாகும். அரசாங்கம் ஒரு முகவரகமாகும். தெளிவான பிரதிநிதித்துவத்திற்குட்பட்ட வகையில் இதன் செல்வாக்கெல்லை காணப்படும். இதற்கப்பால் இதன் செயற்பாடுகள் சட்டவிரோதமானதாக காணப்படும்.”
  2. அரசு கூடியளவிலோ அல்லது குறைந்தளவிலோ நிரந்தரமானதாகும் ஆனால் அரசாங்கம் தற்காலிகமானதாகும்.
  3. அரசு ஆக்கிரமிக்கப்படக்கூடியதாகும். ஆனால் அரசாங்கம் உறுதியானதாகும். அரசு ஒரே மாதிரியானதாக இருக்கும். அரசாங்கம் வேறுபட்ட வடிவங்களில் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படும்.
  4. அரசின் அதிகாரம் உயர்ந்ததும்,உண்மையானதுமாகும். அரசு இறைமையதிகாரத்தினைக் கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கத்திடம் இவைகள் இல்லை. அரசினால் இறைமையதிகாரம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் வரை அரசாங்கத்தினால் இதனைப் பயன்படுத்த முடியும்.
  5. ஒரு அரசாங்க முறைமை தோற்கடிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம். ஆனால் அரசு அவ்வாறானதல்ல.
  6. அரசாங்கத்தின் கால எல்லை மட்டுப்படுத்தப்பட்டதாகும் ஆனால் அரசின் கால எல்லை மட்டுப்படுத்தப்படக் கூடியதல்ல. அல்லது அரசு இறப்பதில்லை.

அரசு,சங்கங்கள்

பன்மைவாதிகள் அரசு, ஏனைய சங்கங்களுக்கிடையில் வேறுபாடுகள் இல்லை எனக் கூறுகின்றார்கள். சமய நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற ஏனைய சங்கங்களிலிருந்து அரசு என்ற சங்கத்திற்கு பிரத்தியேக அந்தஸ்து அல்லது கௌரவம் வழங்கப்படத் தேவையில்லை எனவும் பன்மைவாதிகள் கூறுகின்றார்கள். ஏனைய சங்கங்களைப் போன்று அரசும் ஒரு சங்கமாகும். சமூக விருப்பங்கள்,தேவைகள் எல்லாவற்றையும் அரசு என்ற சங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

சங்கம் என்பது பொது இலக்கிற்காக ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர் குழுக்கள் எனலாம். இச்சங்கங்கள் பொதுவான நோக்கங்களைக் கொண்டவைகளாகவும் இருக்கும். சமூகத்தின் தேவைகள் அனைத்தையும் சங்கங்கள் பூர்த்தி செய்வதில்லை. சில நோக்கங்கள் சங்கங்களின் அங்கத்தவர்களின் கூட்டு முயற்சியினால் மேற்கொள்ளப்படுகின்றன. ஜி.டி.எச்.கோல் என்பவர் சங்கங்கள் பொதுவான தொடர்புகளைக் கொண்டிருக்கும் மக்கள் குழுவாகும். அரசினால் அல்லது சமூகத்தினால் அங்கீகரிக்கப்ட்ட பொதுவான நோக்கத்தினை சங்கங்கள் கொண்டிருக்கின்றன. இவைகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.” எனக் கூறுகின்றார். அரசிற்கும் சங்கங்களுக்குமிடையிலான வேறுபாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. அரசின் பிரதேசம் நிச்சயிக்கப்பட்டதும், வரையறுக்கப்பட்டதுமாகும். அதனை விஸ்தரிக்க முடியாது. மறுபக்கத்தில் சங்கங்களினை குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்திவிட முடியாது. சங்கங்கள் உள்ளுர் அமைப்புக்களாகவோ அல்லது சர்வதேச அமைப்புக்களாகவோ செயற்படலாம். இவ்வகையில் பல சங்கங்கள் உலகளாவிய நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. உதாரணமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், உரோமன் கத்தோலிக்க திருச்சபை போன்றவற்றைக் கூறிக் கொள்ளலாம். சர்வதேச அரசுகளில் உள்ள மக்கள், எல்லை கடந்து இச்சங்கங்களில் அங்கத்துவத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
  2. அரசின் அங்கத்துவம் கட்டாயமானதாகும். ஒரு மனிதன் ஏதாவதொரு அரசின் அங்கத்துவம் பெற்றவனாக இருக்க வேண்டும். (இன்று இரட்டை அங்கத்துவம் வழங்குவது வழக்கிலுள்ளது) ஆனால் சங்கங்களின் அங்கத்துவம் தெரிவுக்குட்பட்டதாகும். ஒரே நேரத்தில் அனேக சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கலாம். அதே நேரம் தான் விரும்பாத போது தனது சங்க அங்கத்துவத்திலிருந்து விலகிவிடவும் முடியும்.
  3. அரசு என்பது நிரந்தரமான சங்கங்கமாகும். ஏனைய சங்கங்கள் தற்காலிகமானவையாகும். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட சங்கங்கள் தமது இலக்கினை அடைந்த பின்னர் கலைக்கப்படலாம். அல்லது தொடர்ந்து இருக்கலாம்.
  4. அரசிடம் இறைமையதிகாரம் உள்ளது. இதனைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி அமுல்படுத்துகின்றது. ஏனைய சங்கங்களுக்கு இறைமையதிகாரம் வழங்கப்படுவதில்லை. சங்கங்கள் தாம் நிறைவேற்றும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான பலம் எதனையும் பிரயோகிக்க முடியாது. சங்கங்கள் நெறிமுறை சார்ந்த பலத்தினை மட்டுமே இதற்காகப் பயன்படுத்தலாம். அரசினால் மட்டுமே தனது அங்கத்தவர்களுக்கு தண்டனையினை வழங்க முடியும்.
  5. அரசின் நோக்கம் மிகவும் பரந்ததாகவும், அகன்றதாகவும் இருக்கும். ஆனால் சங்கங்களின் நோக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஒரு அரசில் பல சங்கங்கள் உருவாக்கப்படலாம். இச் சங்கங்களின் செயற்பாடுகளை வரையறுப்பது அரசேயாகும்.
  6. ஒரு மனிதன் ஒரு நேரத்தில் பல சங்கங்களில் அங்கத்துவம் வகிக்க முடியும் ஆனால் ஒரு மனிதன் ஒரே சமயத்தில் பல அரசுகளில் (இரண்டு அரசுகளுக்கு மேல்) அங்கத்துவம் பெறமுடியாது.
  7. ஒரு அரசு சங்கங்களின் சங்கமாக வரையறுக்கப்படலாம். ஆனால் சங்கங்களின் இருப்பு அரசின் விருப்பத்திலேயே தங்கியுள்ளது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,587 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>