அமுக்கக் குழுக்கள்

பொதுவாக அரசியல் பற்றிய கற்கையானது அரசியல் செயல்முறையுடன் நெருங்கிய தொடர்புடையது என்ற வகையில் குழுக்கள் பற்றிய ஆய்வு மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. சமூகத்திலுள்ள அனைத்து குழுக்களும் அரசியல் பற்றிய கற்கையின் ஒரு பகுதியாக இருப்பதில்லை. எனவே இக்குழுக்கள் பற்றிய ஆய்வு கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பல சிக்கலான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் அரசியல் செயல்முறையுடன் தொடர்புடைய குழுக்கள் அரசியல் பற்றிய ஆய்வில் மிக முக்கியமானவைகளாகும். இக்குழுக்கள் அரசியல் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவையாகும். இருந்தபோதிலும் சமூகத்திலுள்ள சில குழுக்கள் அல்லது பெரும்பாலான குழுக்கள் அரசியல் செயல்முறையுடன் தொடர்புடையனவாகும். இதனால் சமூகத்திலுள்ள சகல குழுக்களினையும் அரசியல் பற்றிய ஆய்வில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அமுக்கக் குழுக்கள் ஜனநாயகத்துடன் தொடர்புடைய சமூக நிறுவனங்களாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்னர் இந் நிறுவனங்களின் வளர்ச்சியை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக 1950களின் பின்னர் அரசியல் பற்றிய கற்கை மனித நடத்தையுடன் இணைத்து ஆய்வு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் குழுக்கள் பற்றிய ஆய்வு முக்கிய இடத்தினை பெறத் தொடங்கியது. குறிப்பாக மரபுசார் அணுகுமுறையின் பிரகாரம் அரசியல் பற்றிய ஆய்வு அரசினையும் அதன் கட்டமைப்புக்களையும் கவனத்தில் கொண்டது. ஆனால் கட்டமைப்புக்கும் அப்பால் பல விடயங்கள் குறிப்பாக மனித நடத்தைகள் அரசியல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துவது தொடர்பான கருத்து இருபதாம் நூற்றாண்டில் முன்னணிக்கு வந்ததைத் தொடர்ந்து, குழுக்கள் பற்றிய ஆய்வு அரசியல் விஞ்ஞானத்தில் முக்கிய இடத்தினை பெறத் தொடங்கியது.

குழுக்கள் பற்றிய ஆய்வு 1918ஆம் ஆண்டு ஆதர் பென்த்லி (Arthur Bentley) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. ஆதர் பென்த்லி அரசாங்கத்தின் செயன்முறை (The Process of Government) என்ற நூலில் அரசாங்க செயன்முறைகளை முதன் முதலில் குழுக்களின் நடவடிக்கைகளுடன் இணைத்து ஆய்வு செய்திருந்தார். அரசியலில் பல குழுக்கள் செல்வாக்குச் செலுத்து¬கின்றன. இக்குழுக்களை விளங்கிக் கொள்ளாது அரசியல் செயல்முறைகளை விளங்கிக் கொள்வது கடினமானதாகும் என இவர் கூறுகின்றார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகள் சங்கத்தினால் அரசியலில் குழுக்களின் பங்கு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழுக்கள் பற்றிய ஆய்வு அரசியல்விஞ்ஞானத்தில்; முக்கியமானதாக கருதப்பட்டதுடன, இது தொடர்பான ஆய்வுகள்; அரசியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அமுக்க குழுக்கள் என்ற சொற்பதமானது மிகப் பரந்ததொன்றாகும். அமுக்க குழுக்கள் (Pressure Groups) மற்றும் நலன் பேண்குழுக்கள் (Interest Groups) ஆகிய இரு பதங்களும் ஒன்றிற்காக மற்றொன்று ஒரேபொருளில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். இவ் இரண்டு பதங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவையாகும். அமுக்க குழுக்களின் ஒரு வகையே நலன்பேண்குழுக்களாகும். இவை பொதுவான கொள்கைகள், தன்மைகளின் அடிப்படையில் ஒன்று சேர்கின்ற குழுக்களாகும். அதாவது எல்லா உறுப்பினர்களும் தமது பொதுவான நோக்கத்திற்காக செயற்படுவதனைக் காணலாம். உதாரணமாக, விவசாயிகள், வர்த்தகர்கள் போன்றோரைக் கொண்ட தொழிற்குழுக்களைக் குறிப்பிடலாம். இங்கு பொதுவான நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நலன்பேண்குழுக்கள் செயற்படுகின்றன. இதன்போது விவசாயிகள், வர்த்தகர்கள் போன்றோரின் பல்வேறு நலன்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

ஆனால் அமுக்கக்குழுக்கள் நலன்பேண் குழுக்களிலிருந்து வேறுபட்டவை. அமுக்கக்குழுக்கள் ஒன்று அல்லது குறிப்பிட்ட சில நலன்களின் அடிப்படையில் செயற்படுவதனைக் காணலாம். இங்கு ஆசிரியர்கள்,விவசாயிகள், வர்த்தகர்கள் போனறவர்கள் அங்கத்தவர்களாக இருப்பர். உதாரணமாக விலங்குகளை கொடுமை செய்பவர்களுக்கு எதிரான இயக்கத்தைக் குறிப்பிடலாம். எனவே சுருக்கமாக கூறின் அமுக்ககுழுக்கள் என்பது பல்வேறுபட்ட நலன்பேண்குழுக்களினை உள்ளடக்கியதொரு குழுவாகும்.

அமுக்க குழுக்களை ஆதரவு வழங்கும் அமுக்கக்குழுக்கள் (Promotional Groups) மற்றும் பாதுகாக்கும் குழுக்கள் (Protective Groups) என இரு வகையானப் பிர்க்கலாம். ஆதரவு வழங்கும் அமுக்கக்குழுக்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவை வழங்கும். உதாரணமாக Lord’s Day Observance Society, Friends of the Earth போன்றவற்றினைக் குறிப்பிடலாம். இதற்கு நேர் மாறாக பாதுகாக்கும் குழுக்கள் (Protective Groups) காணப்படுகின்றன. பாதுகாக்கும் அமுக்கக்குழுக்கள் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும். இதனால் இதன் அங்கத்துவம் மிகவும் குறுகியதாகவும், மட்டுப்படுத்தப்பட்டதாகவும் காணப்படும். உதாரணமாக தொழிற்சங்கங்கள், வைத்திய சங்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அமுக்க குழுக்கள் ஆதரவு அல்லது உதவி வழங்கும் நிறுவனங்களாகும். ஆயினும், பொதுக் கொள்கையின் சில மட்டங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கின்ற நிறுவனங்கள்; என்ற வகையில் கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் தமக்கு சாதகமான விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால்; பரந்தளவிலான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமுக்கக்குழுக்கள் செயற்படுபவையல்ல எனக் கூறப்படுகின்றது. சுருக்கமாக கூறின் ஒரு சில குறிப்பிட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதுடன், அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து தமக்கு வேண்டிய அனுகூலங்களைப் பெறுவதற்கு இடையறாது முயற்சிப்பதே இதன் நோக்கமாகும்.

பிரதிநிதித்துவ ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு பெரும்பான்மைக் கொள்கையின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு வாக்காளர்கள் அரசியல் சமத்துவம், அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரில் ஒருவரை தெரிவு செய்கின்றனர். இந்நிலையில் அமுக்க குழுக்கள் இதனுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன? என்ற சிந்தனை எழுகின்றது. அரசியல் கட்சிகளால் பல்வேறுபட்ட நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அதற்கான பிரதிநிதித்துவமும் அமுக்க குழுக்களுக்கு கிடையாது. ஏனெனில் அவை குறிப்பிட்ட சில நலன்களை அடைந்து கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டதும், தர்க்க ரீதியானதுமான அரசியல் அடையாளத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. பன்மைவாதிகளின் கருத்துப்படி ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அமுக்கக் குழுக்களே நிவர்த்தி செய்கின்றன. இவ் அமுக்கக்குழுக்களானது அரசியல் செயல்முறையின் ஒரு பகுதியாக இருப்பதோடு இவை அரசாங்கக் கொள்கையின் போக்கை மாற்றுகின்ற அல்லது பலப்படுத்துகின்றதொன்றாகவும் பணியாற்றுகின்றது.

பொதுக்கொள்கையினை உருவாக்குவதற்குப் பொருத்தமான பொதுக்கருத்தினை ஒன்றுதிரட்டுவதற்கான பொறிமுறையொன்றினை பயன்படுத்துவதில் இடர்கள் உள்ளன. இந்நிலையில் மக்களது கோரிக்கைகளை ஒன்றுதிரட்டுவதும் அதனை அரசாங்கப் பொறிமுறைக்கு கொண்டு செல்வதும் யார் என்ற பிரச்சினை ஏற்படுகின்றது. இக்கட்டத்தில் தான் குழுக்களின் செயற்பாடு முக்கியம் பெறுகின்றன. சமூகத்திலிருக்கின்ற சில நலன்பேண் குழுக்கள் இத்தகைய கோரிக்கைகளை அரசியல் செயல்முறைக்கு கொண்டு செல்லு¬கின்றன. இவை உண்மையில் அரசாங்கத்தின் மீது முறையானதும் முழுமையானதுமான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதனை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. அதாவது அரசாங்க பொதுத்துறை நிருவாகத்தின் நடத்தை மீது செல்வாக்கு செலுத்துவதனை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற ஒழுங்கமைப்பட்ட சமூக குழுக்களாக உள்ளன. இக்குழுக்கள் தமது செல்வாக்கினை நேரடியாக மாத்திரமன்றி மறைமுகமாகவும் பிரயோகிக்க விரும்புகின்றன.

அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் மறைமுகமாக செல்வாக்குச் செலுத்தும் அமுக்கக்குழுக்கள் அரசியல் கட்சிகள் போன்று தேர்தல் மூலம் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சி அமைப்பதில்லை. அதாவது அரச அதிகாரத்தினை கைப்பற்றுவதனை விட அரசாங்க தீர்மானங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதனையே தமது நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. சுருக்கமாக கூறின் அரசாங்கத்தினை அமைப்பதனை நோக்கமாகக் கொள்ளாது அரசாங்கத்தின் நிறைவேற்றுத்;துறை, சட்டத்துறை, நீதித்துறை மற்றும் பொதுத்துறை நிருவாகம் போன்றவற்றிலும், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்க திணைக்களங்களிலும் செல்வாக்கு செலுத்துவதனையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன. அதாவது அதிகாரத்தினைக் கைப்பற்றி அதன் மூலம் தமது நலன்களை அடைய அமுக்கக் குழுக்கள் முயற்சிப்பதில்லை. இருந்தபோதிலும் தமது நோக்கங்களுடன் ஒத்துப்போகக் கூடிய அரசியல் கட்சிக்கு ஆதரவளித்து தமது நோக்கங்களை அடைந்து கொள்ளுகின்றன.இதற்காக தேர்தல் காலங்களில் தமது நோக்கங்களுடன் ஒத்துப்போகக்கூடிய அரசியல் கட்சிகளின் சார்பாக பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன.

வகிபாகம்

அமுக்கக்குழுக்கள் அரசியல் கட்சிகளிலிருந்து வேறுபட்டனவாகும். அரசியல் கட்சிகளின் அங்கத்துவம் மிகப் பரந்ததாகும். அதாவது இலட்சக் கணக்கான அங்கத்துவத்தினைக் கொண்டதாக இருக்கின்ற அதேவேளை அமுக்கக்குழுக்களின் அங்கத்துவம் மிகக் குறைந்தளவிலானதாக காணப்படுவது வழமையாகும்.

அமுக்கக்குழுக்கள் குறிப்பிட்ட வர்க்கத்தினரின் சில நலன்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவற்றினை பாதுகாப்பதனையும், பராமரிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதனைக் காணலாம். உதாரணமாக விவசாயிகளின்; நலனை பேணுவதற்கான விவசாயப் பொருட்களின் விலையை அதிகரித்தல் என்ற விவசாயிகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றன.இதனால் அமுக்கக்குழுக்கள் சமூக நலன்களை ஒன்றுதிரட்டுவதில் (Articulation) மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. அரசியல் கட்சிகள் இத்தகைய நலன்களை ஒருங்கிணைப்பதில் (Aggregation) முகவராக செயற்படுவதனைக் காணலாம். மேலும் அரசியல் கட்சிகள் அரசியல் செயல்முறையில் நேரடியான பாத்திரத்தினை வகிக்கின்ற அதேவேளை அமுக்கக்குழுக்கள் மறைமுகமான பாத்திரத்தினை அரசியல் செயல்முறையில் வகிப்பதனைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.

அமுக்கக்குழுக்களானது அரசொன்றில் மிக முக்கியமான வகிபங்கினை வகித்து வருவதனைக் காணலாம். அரசொன்றில் அமுக்கக்குழுக்கள் வகிக்கின்ற வகிபங்கினை சட்டத்துறைää நிறைவேற்றுத்;துறை, நீதித்துறை மற்றும் பொதுநிர்வாகம் போன்றவற்றில் அவதானிக்கலாம்.

சட்டத்துறையை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் குறித்தளவு வகிபங்கினை கொண்டுள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்தல், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை தெரிவு செய்தல்,தேர்தல் பிரச்சாரத்துக்கான நிதியை சேகரித்தல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இவ்வாறு பல்வேறு ஆதரவுகளை வழங்குகின்ற அமுக்கக்குழுக்கள் தம்மால் தெரிவு செய்யப்பட்ட சட்டத்துறை உறுப்பினர்கள் மீது தமது நலன்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்குகின்ற போது செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்கலாம்.

நிறைவேற்றுத்துறையிலும் அமுக்கக்குழுக்கள் செல்வாக்கு செலுத்துவதனைக் அவதானிக்கலாம். நிறைவேற்றுதுறை முறைகளில் ஒன்றான ஜனாதிபதி முறையில் தனியொரு நபரின் மீது செல்வாக்கு செலுத்துகின்ற அதேவேளை பிரதமரை தலைமையாகக் கொண்ட பாராளுமன்ற முறையில் அமைச்சரவையூடாக அமுக்ககுழுக்கள் கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் தாக்கம் செலுத்துதனைக் காணலாம்.

பொதுத்துறை நிருவாகத்தில் எந்தவொரு பொதுத்துறை நிருவாகமும் அரசியல் செல்வாக்கிற்கு உட்படாது செயற்படுவதில்லை. அமுக்கக்குழுக்கள் சிறப்பு தேர்ச்சியுடையவர்களை அரசாங்க ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பி கொள்கை உருவாக்கல் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. உதாரணமாக பிரித்தானிய அரசாங்க ஆலோசனைக் குழுக்களின் நூற்றுக்கணக்கான நிரந்தர பதவிகள் அமுக்கக் குழுக்களின் பிரதிநிதிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறையிலும் அமுக்கக்குழுக்களின் செல்வாக்கு காணப்படுகின்றது. எனினும் பொதுவாக நீதித்துறையில் அரசியல் செல்வாக்கு குறைவாக இருப்பினும், பிரதம மற்றும் ஏனைய நீதிபதிகளின் நியமனம் அரசியல் நியமனமாக காணப்படுவதால் அமுக்கக் குழுக்களின் செல்வாக்கு மறைமுகமாக இடம்பெற சந்தர்பங்கள் உள்ளன.

செயற்பரப்பு

அமுக்க குழுவொன்றின் செயற்பாடானது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பாக அரசியல் கட்டமைப்பு, அரசியல் கட்சிமுறைமை, அரசியல் கலாசாரம், பிரச்சினையின் தன்மை, மற்றும் குழுவின் தன்மை போன்றன அமுக்க குழுக்களின் செயற்பாட்டினைத் தீர்மானிக்கின்றன.

ஜனநாயக நாடொன்றில் அரசியல் நிறுவன கட்டமைப்பு அமுக்ககுழுவினது நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன. ஊதாரணமாக இரு சட்டமன்றத்தைக் கொண்ட அமெரிக்காவில் இரண்டுசபைகளுக்கும் சமமான அரசியல் முக்கியத்துவத்துவம் உள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க காங்கிரசில் பலமான குழு முறையும், பல்வேறு நிறுவனங்களிற்கிடையே அதிகாரப் பிரிவினையும் (Separation of Powers) உள்ளது. இது அமுக்க குழுக்களிற்கான வாய்ப்பினை வழங்குகின்றன.

பிரித்தானியாவில் அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் அமுக்க குழுக்கள் அதிகமான வினைத்திறனுடன் செயற்பட வேண்டுமாயின் அமைச்சர்களினதும் சிவில் உத்தியோகத்தர்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சி முறைமையும் அமுக்க குழுக்களின் செயற்பாட்டினை தீர்மானிக்கின்றன. பல கட்சி முறைமை அமுக்கக்குழுக்களின் வினைத்திறனான செயற்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.

இவைதவிர குறிப்பிட்ட நாட்டு மக்களின் அரசியல் கலாசாரம் குறிப்பிட்ட பிரச்சினையின் தன்மை போன்றன அமுக்கக் குழுக்களின் செயற்பாடுகளை நிர்ணயிக்கின்றன. மேலும் அமுக்கக் குழுவின் தன்மையும் மிக முக்கியமானதாகும். அதாவது குறிப்பிட்ட அமுக்கக் குழுவின் நிதி நிலைமை, அங்கத்துவத்தின் அளவு தரம் போன்றன மிக முக்கியமானவையாகும். மிகப் பெரிய அங்கத்துவம் பொது மக்களின் பாரிய ஆதரவினை காட்டுகின்றதொரு விடயமாகும். அதிகளவான அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கின்ற அமுக்க குழுக்கள் மிகப் பலம்வாய்ந்தளவில் அரசாங்க கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) 140 நாடுகளை உறுப்பு நாடுகளாகவும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான அங்கத்தவர்களையும் கொண்டதொரு அமைப்பாகும். இது மனித உரிமைகளை பாதுகாப்பதோடு,கைதிகளை சித்திரவதை¬யிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அரசாங்கங்களை தூண்டுவதோடு,அதற்கு கட்டுப்படாது அரசாங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகளிற்கும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றது.

இது தவிர கிறீன் பீஸ் (Green Peace) ஒக்ஸ்பாம் (Oxfam) போன்றவை மனித உரிமைகள், மற்றும் அபிவிருத்தி போன்றவற்றுக்காக பல முன்மாதிரியான செயற்பாடுகளை வழங்கிவருகின்றன. அரசாங்கங்கள், மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் இருக்கும் நம்பிக்கையினை விட அதிகளவிலான நம்பிக்கையை இத்தகைய அமைப்புக்கள் மீது மக்கள் கொண்டுள்ளனர். உதாரணமாக கிறீன் பீஸ் இயக்கத்தினால் திமிங்கிலங்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.

அரசாங்க செயல்முறைகளில் முக்கியமான பகுதியாக காணப்படும் அமுக்கக்குழுக்கள் சாதாரண மக்களும் அரசியலில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை வழங்குவது மட்டுமல்லாது தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தீர்மானங்களை எடுப்போருடன் தொடர்புகளை கொண்டிருக்க முயற்சிக்¬கின்றது. மேலும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தினை ஏற்படுத்துவதிலும் தனிப்பட்டவர்களதும்,கூட்டுக் குழுக்களதும் நீதியான கோரிக்கைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரசியல் உறுதித் தன்மையை ஏற்படுத்த விளைகின்றது.

அதுமட்டுமல்லாது பல்வேறுபட்ட ஆலோசனைகளை அரசியல் தலைவர்களுக்கும் சட்டத்தினை உருவாக்குபவர்களுக்கும் வழங்குவதோடு நிருவாகத்துக்கும் உதவிகளை வழங்குகின்ற அமைப்பாக காணப்படுகின்றது. மேலும் அரசாங்கத்தின் தரத்தினை அதிகரிக்கச் செய்பவையாக காணப்படுகின்றன. அதாவது அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படாத நலன்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அது அரசாங்கத்தினை வினைத்திறனுடையதாக மாற்றுகின்றது.

ஜனநாயக பாரம்பரியம்

தாராண்மை ஜனநாயகத்தின் அடிப்படைப்பண்பாகிய சங்கம் அமைப்பதற்கான உரிமையை அழுக்கக்குழுக்கள் பயன்படுத்துகின்றன. தாராண்மை ஜனநாயகம் வினைத்திறனாக செயற்படுவதற்கான முன்னிபந்தனையாக அமையும் இவ் அமுக்ககுழுக்கள் புதிய விடயங்கள் மற்றும் பிரச்சினைகளினை அரசியல் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த கடமையை இவை மேற்கொள்ளுகின்றன. மேலும் சமூக தேக்க நிலையை ஊடறுத்து செல்வதோடு சமூக முன்னேற்றத்தையும் முன்னெடுக்கின்றன. உதாரணமாக பெண்கள், மற்றும் சூழல் பாதுகாப்பு இயக்கங்களை குறிப்பிடலாம். குறிப்பாக எதிர்கட்சிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கு மக்களின் ஆதரவைத் திரட்டி ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு உதவுகின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலைத்தேச நாடுகளில் பெரும்பாலும் சமூகத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு குழுக்கள் காணப்படுகின்றன. அங்கு எந்தவொரு நபரும் தாம் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுகிறோமென கருதும் போதோ அல்லது உணரும் போதோ அமுக்கக்குழுவொன்றை உருவாக்கக்கூடிய நிலைமை ஜனநாயக நாடுகளில் காணப்படுகின்றது.

அமுக்கக் குழுக்கள் அரசியலுக்கு புதியதொரு காட்சிநிலையல்ல. ஆனால் அவற்றுக்கு அண்மைக் காலத்தில் தான் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அமுக்கக்குழுக்களானது ஆரம்பத்தில் ஜனநாயக செயற்பாடுகளிற்கு பாதகம் விளைவிப்பவையென்ற எடுகோளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் பிற்பட்ட காலத்தில் சமூக ஒருமைப்பாட்டினையையும் அரசியல் உறுதிப்பாட்டை பேணுவதிலும் முக்கியமான வகிபாகத்தினை வகிக்க தொடங்கியதையடுத்து அமுக்க குழுக்கள் அரசியல் முறைமையில் முக்கியமான இடத்தை வகித்து வருகின்றது. மாக்சிச வாதிகளும் இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்கள் அத்தியாவசியமானவை என குறிப்பிடுகின்றமை அமுக்கக்குழுக்களின் இருத்தலை நியாயப்படுத்துகின்றது.

நவீன காலத்தில் அமுக்கக்குழுக்கள் செயற்பாடும், அதன் வளர்ச்சியும் நன்கு அதிகரித்துள்ளது. காரணம் சமூக பொருளாதார சிக்கல் நிலைமை அதிகரித்தமை, சிறப்பான தொடர்பாடல் வசதிகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப்பரப்பு அதிகரித்துள்ளமை, வாக்களிப்பு நடத்தைகளில் காணப்படும் சிக்கல் தன்மை, போன்றவையாகும். நவீன காலத்தில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைமை அமுக்கக்குழுக்கள் உருவாக காரணமாக அமைந்துள்ளன. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும் புரட்சியும் மக்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்புகளை மேற்கொள்ள தாராளமான வசதிகளை வழங்கு¬கின்றன.

அமுக்க குழுக்களை பொறுத்தமட்டில் சில உள்ளுர் அரசாங்கங்கள் மீது தாக்கம் செலுத்துபவையாக காணப்பட்டாலும் மேலும் சில சர்வதேச, மற்றும் உள்ளுர் மட்டங்களில் தாக்கம் செலுத்துபவையாக காணப்படுகின்றன. இதற்காக துண்டுப்பிரசுரங்களை அனுப்பியும் முறைப்பாடுகளை அனுப்பியும் பொது மக்கள் ஆதரவைத் திரட்டியும் தமது தாக்கத்தினை செலுத்த முற்படுகின்றது. அதுமட்டுமல்லாது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதாவது தொடர்பு சாதனங்கள் வாயிலாக அரசாங்க கொள்கைத் தீர்மானங்கள் மீது தாக்கம் செலுத்துவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.

இன்றைய நிலையில் வேறுபட்ட நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமுக்க குழுக்களின் செயற்பாடானது பெரும்பாலும் அரசாங்கங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அமுக்க குழுக்கள் சுயநல நோக்கோடு இயங்குபவை என்றும் வன்முறைக்கு வழிசமைப்பவை என்றும் பொது மக்களின் நலனில் அக்கறை கொள்ளுவது குறைவு எனவும் விமரிசிக்கப்படுகின்றது. இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. ஏனெனில் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான விரும்பத்தகாத உபாயங்களையும் மார்க்கங்களையும் கையாள்வதனைக் காணக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபடுகின்றமை மேற்கூறப்பட்ட கூற்றினை ஆமோதிப்பதாகவே அமைந்துள்ளன. தமது குறிப்பிட்ட நோக்கத்திற்காக பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் குழுக்களால் மேற்கொள்ளப்படும் போது இராணுவ பலத்தினை பயன்படுத்துகின்றன. இவ்வாறான சிவில் ஒழுங்கின்மை ஜனநாயக சமூகமொன்றில் நியாயப்படுத்தப்படுவதில்லை. அதாவது அமுக்கக்குழுக்கள் ஜனநாயகத்திற்கு மிக முக்கியமான பரிமாணத்தை வழங்கினாலும் கூட அவை பெரும்பாலும் ஜனநாயகத்திற்கு இடையூறு விளைவிக்க கூடியனவாக காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது அரசியல் சமத்துவமின்மையையும் ஏற்படுத்துகின்றன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,374 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>